உ.பி.யில் 8 அமைச்சர்கள் நீக்கம்: முதல்வர் அகிலேஷ் அதிரடி
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 8 அமைச்சர்களை அதிரடியாக நீக்கி, அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன், 9 அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 224 இடங்களில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த கட்சியின் தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
60 அமைக்கள் கொண்ட அந்த மாநிலத்தில், ஏற்கனவே 6 அமைச்சர்களின் இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், 5 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 3 இணையமைச்சர்களை நீக்கியும், 9 அமைச்சர்களின் இலாக்களை பறித்தும் முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் தோல்வி போன்ற காரணங்களுக்காக அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
வரும் 31ம் தேதி அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் உ.பி மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 71 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு ஐந்து இடங்கள் மட்டுமே கிடைத்தன.
இந்நிலையில், வரும் 2017ம் ஆண்டில் உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க 'மிஷன் 2017' என்ற திட்டத்தை சமாஜ்வாதி கட்சி தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைச்சரவை மாற்ற நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரத்தில் ஒரே நேரத்தில் 8 அமைச்சர்கள் நீக்கப்பட்டதும், 9 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டதும் உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.