மத வெறியர்களிடமிருந்து தப்ப தனது இந்து நண்பரை அழைத்தும் உயிர் தப்ப முடியாமல் மடிந்த இக்லாக்
தாத்ரி, உ.பி.: மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி கொலை வெறியுடன் தன்னையும், தனது மகனையும் தாக்கிய மத வெறியர்களிடமிருந்து தப்பிக்க தனது பால்ய கால இந்து நண்பர் மனோஜ் சிசோடியாவின் உதவியை நாடியுள்ளார் முகம்மது இக்லாக். ஆனால் அவர் விரைந்து வருவதற்குள் இக்லாக்கின் மூச்சை நிறுத்தி விட்டது அந்த வெறி பிடித்த இந்து கும்பல்.
இக்லாக்கிடமிருந்து தகவல் கிடைத்ததும் பதறிப் போன சிசோடியா உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். அடுத்த 15 நிமிடத்தில் அவரும், போலீஸாரும் அங்கு வந்து விட்டனர். ஆனால் அந்த கால் மணி நேரத்திற்குள்ளாகவே கொலை வெறியாட்டத்தை முடித்து விட்டிருந்தது அந்த கொலைகாரக் கும்பல்.
கடைசி முயற்சியாக தனது உயிர் நண்பரான சிசோடியாவுக்கு போன் செய்துள்ளார் இக்லாக். அதுதான் அவர் கடைசியாக பேசிய தொலைபேசிப் பேச்சாகும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இக்லாக்கின் வீட்டு அருகே வசிக்கும் சிசோடியா
சிசோடியாவும், இக்லாக்கும் நீண்ட கால நண்பர்கள். பால்ய காலம் முதல் பழகி வந்தவர்கள். சிசோடியாவின் வீடு, இக்லாக்கின் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. பல சரக்குக் கடை வைத்துள்ளார் சிசோடியா.

இரவு பத்தரை மணிக்கு போன்
சம்பவத்தன்று இரவு பத்தரை மணியளவில் சிசோடியாவுக்குப் போன் செய்துள்ளார் இக்லாக். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கிராமத்தில் இப்படி ஒரு கொடூரமான சம்பவத்தை நான் பார்த்ததே இல்லை. எனது நண்பனின் கொடூர மரணம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தூங்கச் சென்றபோது
கிராமத்தில் பத்து மணி என்பது மிகவும் லேட் நைட்டாகும். நானும் தூங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் எனது செல்போனில் இக்லாக்கின் பெயர் வந்தது. அவர் என்னை அழைத்தார். உடனடியாக போனை எடுத்துப் பேசியபோது அவரது குரலில் நடுக்கம் தெரிந்தது. அவர் என்னிடம், மனோஜ் பய், நாங்கள் அபாயத்தில் இருக்கிறோம். போலீஸைக் கூப்பிடு. உடனடியாக அவர்களை வரச் சொல் என்று கூறினார். அதுதான் இக்லாக் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை.

போலீஸுக்குத் தகவல்
உடனடியாக நான் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தேன். எனது நண்பன் அபாயத்தில் இருப்பதாக கூறி விட்டு நான் இக்லாக்கின் வீட்டுக்கு ஓடினேன். எங்குமே நிற்காமல் வெறி பிடித்தவன் போல வேகமாக ஓடினேன். ஆனால் எல்லாமே முடிந்து போய் விட்டது அதற்குள். போலீஸாரும் கால் மணி நேரத்திற்குள் வந்து விட்டனர். ஆனால் அதற்குள் இக்லாக் இறந்து போயிருந்தார். மிகக் கொடூரமாக அவரைக் கொன்றிருந்தனர்.

சீக்கிரம் போயிருந்தால் காப்பாற்றியிருக்கலாம்
ஒரு வேளை எனக்கு சீக்கிரமே தகவல் கிடைத்து போயிருந்தால் காப்பாற்றியிருக்கலாமோ என்று நினைக்கிறேன். அந்த கொலை வெ்றி பிடித்த கும்பலை கெஞ்சிக் கூத்தாடியாவது எனது நண்பனைக் காப்பாற்றியிருக்க முடியும்.

மகனை மட்டுமே மீட்க முடிந்தது
எங்களால் இக்லாக்கின் 21 வயது மகனை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. அவனும் கூட பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் என்றார் சிசோடியா.

மண்டை ஓட்டில் படுகாயம்
இக்லாக்கின் மகன் டேனிஷ் மிகவும் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது மண்டை ஓடு உடைந்திருந்தது. அவருக்கு மூளையில் மிகவும் சிக்கலான 2 ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அவர் அபாய கட்டத்தில்தான் இருந்து வருகிறார்.

எனக்குமே கூட ஆபத்துதான்
சிசோடியா மேலும் கூறுகையில், இக்லாக்கின் மகனை மீட்டு நான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர் என்னையும் கூட அந்த வெறி பிடித்த கும்பல் துரத்தி வந்து கொல்லலாம் என்று அஞ்சினேன்.

பிரியத்துக்குரிய இக்லாக்
இக்லாக்குடனும், அவரது குடும்பத்தினருடனும் நான் குடும்ப நண்பராக பழகி வந்தேன். நான் அடிக்கடி அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவேன். ஒன்றாக பழகி வந்தோம்.

வேதனையாக உள்ளது
சிறு வயது முதலே நானும் இக்லாக்கும் நண்பர்கள். நீண்ட கால நட்பு இது. பேச ஆரம்பித்த வயது முதல் இக்லாக் என்னுடைய தோழன். அவரது மூத்த மகன் விமானப்படையில் சேர்ந்தபோது நானும், அவரும் குழந்தைகள் போல மகிழ்ச்சியில் துள்ளினோம், சேர்ந்து கொண்டாடினோம். என் வீட்டில்தான் அவரது மகள் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்பார். நாங்கள் பார்க்க வளர்ந்தவர் அவர். எங்கள் வீட்டுப் பிள்ளைகளாக இக்லாக்கின் பிள்ளைகள் வளர்ந்தனர்.

வரலாறு காணாத வன்முறை
இந்தக் கிராமத்தில் 6000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதில் 30 முதல் 40 முஸ்லீம் குடும்பங்கள்தான் உள்ளனர். யாரும் யாருடனும் மோதிக் கொண்டதில்லை. அவரவர் பாட்டுக்கு வசித்து வருகின்றனர். யாரும் கலந்து பேசுவது கூட கிடையாது. இப்படிப்பட்ட வன்முறையை எங்களது கிராமம் இதுவரை கண்டதில்லை என்றார் சிசோடியா.

சிசோடியா வீட்டுக்குப் பாதுகாப்பு
தற்போது சிசோடியா வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இதுகுறித்து அங்கு நின்றிருந்த சப் இன்ஸ்பெக்டர் சதீப் சிங் செளகான் கூறுகையில், சிசோடியாதான் போலீஸாரை முதலில் அழைத்தவர். சிசோடியாவுக்குத்தான் இக்லாக் கடைசியாக பேசியிருந்தார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications