கோவா.. தொங்கு சட்டசபை வந்தால் காங்கிரசுடன் கூட்டணியா? என்ன சொல்கிறார் ஆம் ஆத்மி கெஜ்ரிவால்?
பானாஜி: கோவா, உத்தரகாண்ட்டில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு வந்தால் காங்கிரசுடன் கூட்டணி உண்டா என்பது குறித்து ஆம்ஆத்மி கட்சியின் டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இந்தியாவில் உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநில தேர்தல்களில் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
இதில் பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சரண்ஜித் சன்னி முதல் அமைச்சராக உள்ளார். மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20ல் தேர்தல் நடைபெற உள்ளது.
ஆங்கிலேயர்களைப் போல பஞ்சாப்பை கொள்ளையடிக்க வந்த கெஜ்ரிவால்: முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி சாடல்
கோவா தேர்தல்
கோவாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. பிரமோத் சாவந்த் முதல் அமைச்சராக உள்ளது. மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. புஷ்கர் சிங் தாமி முதல் அமைச்சராக உள்ளார். மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளை தோற்கடித்து ஆட்சியை பிடிக்க ஆம்ஆத்மி கட்சி முயற்சித்து வருகிறது. இந்நிலையில் கோவா, மணிப்பூர் சட்டசபை தேர்தல் குறித்து ஆம்ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் விரிவாக பேட்டியளித்துள்ளார்.
வெற்றி தருவார்கள்
அவர் கூறியதாவது: நாங்கள் 7 ஆண்டுகளாக டெல்லிக்காக உழைத்து வருகிறோம். மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். இதேபோல் கோவா மக்களும் வெற்றியை தருவார்கள். கோவாவின் உட்பகுதிகளுக்கு சென்றபோது 3 விஷயங்களை உணர்ந்தேன். டெல்லியில் பள்ளி, மருத்துவமனைகளை மேம்படுத்தியது போல் கோவாவிலும் பணி செய்ய வேண்டும். இலவச மருத்துவ திட்டம், இலவச மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இரண்டாவதாக ஆம்ஆத்மி கட்சியை கோவா மக்கள் அறிந்துள்ளனர் என்பதையும், 3வதாக கோவாவில்கடந்த முறையை விட இந்த முறை மக்கள் ஆதரவு உள்ளதையும் நினைத்தேன்
மாற்றத்துக்கான வாய்ப்பு
கோவா மக்களுக்கு ஒன்றை கூறுகிறேன். நாளை தேர்தல் நடைபெற உள்ளது. நீங்கள் 27 ஆண்டுகள் காங்கிரசுக்கும், 15 ஆண்டுகள் பாஜகவுக்கும் வாய்ப்பு வழங்கி உள்ளீர்கள். இந்த முறை மாற்றத்துக்கா எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். ஆம்ஆத்மி கட்சிக்கு ஓட்டளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகளில் காங்கிஸ், பாஜகவை மறக்கும் அளவுக்கு ஏராளமான நலத்திட்டங்கள், மக்கள் பணிகளை செய்கிறோம். இதுதவிர இன்னொன்றை பொதுமக்களிடம் கூறுகிறேன். நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்கும் பட்சத்தில் வெற்றி பெறும் எம்எல்ஏக்கள் மார்ச் 10(ஓட்டு எண்ணிக்கை தினம்) பாஜகவுக்கு செல்வார்கள். இதில் எந்த பயனும் இல்லை. பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என நினைத்தால் ஆம்ஆத்மிக்கு மட்டுமே ஓட்டளியுங்கள்.
மம்தாவும் நானும் எதிரிகள்
எனக்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் நல்ல புரிதல் உள்ளது. கோவாவை பொறுத்தமட்டில் இருவரும் தேர்தல் சார்ந்த எதிரிகளாக உள்ளோம். இது எந்த வகையிலும் எங்கள் உறவை பாதிக்காது. மம்தா பானர்ஜியை நான் மதிக்கிறேன். அவர் மீது எனக்கு பாசம் உண்டு.உத்தரகாண்ட் மக்கள் தலா 10 ஆண்டுகள் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆட்சி செய்ய வழங்கியுள்ளனர். இந்த இருகட்சியினரும் உத்தரகாண்ட் மாநிலத்தை சிதைத்துள்ளனர்.
ஒருமுறை வாய்ப்பு
டெல்லியில் நாங்கள் மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் குறித்து அங்குள்ள குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் கேளுங்கள். நேர்மையான அரசாங்கத்தை நடத்தி வருகிறோம். ஒருமுறை வாய்ப்பு அளியுங்கள். உத்தரகாண்டிலும் மக்கள் பணி செய்ய காத்திருக்கிறோம். அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி ஏழைகளின் கல்வி தரத்தை மேம்படுத்தி ஏழைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க முயற்சிக்கிறேன். சிறந்த தேசத்தை இதை விட எப்படி கட்டமைக்க முடியும்.
சிறந்த தர்மம்
மேலும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி, ஏழைகளுக்கு இலவச சிகிச்சை, பரிசோதனை, மருந்து வழங்கினால் போதும். அதை விட சிறந்த தர்மம் எதுவுமில்லை. இதை நான் செய்து கொண்டிருக்கிறேன். இதில் காங்கிரஸ், பாஜகவுக்கு என்ன பிரச்னை உள்ளது என தெரியவில்லை. விமர்சிப்பதை வாடிக்கையாக்காமல் இந்த பணிகளை அவர்களால் செய்ய முடியுமா.
ஊழலை ஒழிப்போம்
மாநிலங்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம். காங்கிரஸ், பாஜக கட்சிகள் ஊழலின் ஊற்றுகள். இவர்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து ஊழல் செய்கின்றனர். நாங்கள் ஊழல் நிலையை மாற்ற முயற்சிக்கிறோம். டெல்லியில் இதை செய்துள்ளதால் அங்கு காங்கிரஸ், பாஜக கட்சிகள் இல்லை. இருகட்சிகளும் தூகள் அளவில் சுருங்கியுள்ளன. டெல்லியில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. பாஜக 2 அல்லது 4 இடங்களில் மட்டும் வெற்றி பெறுகிறது.
எம்எல்ஏக்களை இழுக்க முடியாது
காங்கிரஸ், பாஜக கட்சிகளிலும் ஊழல் தவிர்த்து ஒன்றும் இல்லை என்பதை பொதுமக்களும் பார்த்து வருகின்றனர். கோவாவில் இன்னும் தேர்தல் முடியவில்லை. ஆனால் அதற்குள் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பாஜகவில் இணைய குதிரைபேரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் முடிவுகள் வந்த உடனே பாஜகவுக்கு சென்று விடுவார்கள். டெல்லியில் 28 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றபோது எங்கள் எம்எல்ஏக்களை பாஜகவினர் இழுக்க நினைத்து தோல்வி அடைந்ததை நினைவிருக்கும் என நினைக்கிறேன். ஒருபோதும் ஆம்ஆத்மி எம்எல்ஏக்களை எளிதில் பிற கட்சிக்கு இழுக்க முடியாது'' என கூறினார்.
தொங்கு சட்டசபை
மேலும், கோவா, உத்தரகாண்டில் எந்த கட்சிகளுக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, அரவிந்த் கெஜ்ரிவிவால் பதிலளித்தார். அவர் கூறுகையில், ‛‛மாநிலங்களில் தொங்கு சட்டசபையை மக்கள் உருவாக்க கூடாது. அனைவரும் ஆம்ஆத்மி கட்சிக்கு ஓட்டளித்து மெஜாரிட்டியுடன் வெற்றி பெற செய்ய வேண்டும்'' என்றார்.