காங்கிரசுடன் தெலுங்கு தேசம் கூட்டணி.. தனித்துவிடப்பட்ட பாஜக.. சந்திரபாபு நாயுடு விளக்கம்
ஹைதராபாத்: இணைந்து போட்டியிடலாம் என்ற தனது கோரிக்கையை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் நிராகரித்துவிட்டதாலேயே, காங்., உடன் கூட்டணி அமைத்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.
ஹைதராபாத்: காங்கிரசுடன், தெலுங்கு தேசம் கட்சி ஏன் கூட்டணி வைத்தது என்பது குறித்து அக்கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ஆந்திராவில் பாஜகவை தனித்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைத்திருந்தது.
[மழையாம், புயலாம்.. இடைத்தேர்தலை வேண்டாம் என்று அரசு சொன்னதற்கு உண்மை காரணம் என்ன? ]
காலத்தின் கட்டாயம்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து அளித்த பேட்டி: பாஜகவை வீழ்த்த தேசிய அளவில் பெரிய அளவில் கூட்டணி அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம். சூழ்நிலை காாரணமாகவே காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளோம். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி தடுக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் பாஜக மற்றும் காங்கிரசுக்கு அடிப்படை இல்லை. எனவே, தென்னிந்தியாவில் இரு தெலுங்கு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சந்திரசேகர ராவிடம் வற்புறுத்தினேன்.
சந்திரசேகர ராவ் பதில் இல்லை
இதுபற்றி அவர் யோசிப்பதாக கூறியனார். ஆனாலும், பதில் சொல்லவில்லை. ஒரு வார காலம் காத்திருந்த பிறகு, எனது முடிவை அறிவித்தேன்.
பாஜக, தெலுங்கு தேசத்திர்கு எதிராக, செயல்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
பாஜகவிற்கு சந்திர சேகரராவ் ஆதரவு
ஆந்திர மாநிலத்திற்கு அநீதி இழைத்த மத்திய அரசிற்கு எதிராக நாடு தழுவிய ஆதரவை பெற விரும்புகிறோம். சந்திரசேகர ராவ் பாஜகவின் பிடியில் இருப்பதால் எங்களுடன் கூட்டணி வைக்க மறுக்கிறார். எங்களது மெகா கூட்டணி மூலம் பாஜகவின் கூட்டணியை முறியடிப்போம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
கோபம்
ஆந்திரா பிரிக்கப்பட்டு தெலுங்கானா உருவாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் காரணம் என்று, குற்றம் சாட்டி வந்தது தெலுங்கு தேசம். ஆனால் இப்போது அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதற்கு காரணம், பாஜக மீதான கடும் அதிருப்திதான் என்று கூறப்படுகிறது.