மோடியை புகழ்ந்து, பாஜகவில் சேர அடிபோடும் அமர் சிங்
இந்தூர்: சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமர் சிங் பாஜகவில் சேர ஆர்வமாக உள்ளார்.
சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமர் சிங் பாஜக அழைத்தால் அந்த கட்சியில் சேர தயாராக உள்ளார். இது குறித்து அந்த இந்தூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பாஜக மிகப்பெரிய அரசியல் கட்சி. வாய்ப்பு கிடைத்தால் நான் பாஜகவில் சேர மாட்டேன் என்று சொல்லவில்லை. ஆனால் யார் எனக்கு வாய்ப்பு தருகிறார்கள். கட்சியில் சேர்வது குறித்து நான் அவர்களுக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி செய்யும் விஷயங்களில் குறையிருந்தால் நிச்சயம் விமர்சிப்பேன். ஆனால் மோடியின் தாயும், உறவினர்களும் சாதாரண மக்களை போன்று வாழ்வது, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதை யாராலும் மறுக்க முடியாது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து மோடி அறிவிப்பார் என்பதாலேயே அது குறித்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்தனர் என்றார்.