கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்!
டெல்லி: கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலரை தாண்டாத வரை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தற்போது ஏற்படும் இழப்பை நிறுவனங்கள் தாங்கி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள மத்திய அரசு, வீட்டு உபயோக சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறது.
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் 10 நாட்களாக தொடர்ந்து வருகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயி கடும் தட்டுப்பாடி ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அவசர கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெங்களூரில் இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை சென்னையில் இன்னும் 2 நாட்களில் ஏற்படும் நிலை இருப்பதால், மத்திய அரசு விரைவாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதனிடையே பெட்ரோல், டீசல் விலையும் உயரக்கூடும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி நாட்டில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை உயர்த்த வேண்டாம் என்று இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதேபோல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டாத வரை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தற்காலிக இழப்புகளை நிறுவனங்கள் தாங்கி கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதேபோல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஏற்கனவே ரூ.60 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் முன்பதிவுக்கு உயர்நிலைக் குழு கூட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இனி சிலிண்டர் விநியோகிக்கப்பட்ட 25 நாட்களுக்கு பின்னரே அடுத்த முன்பதிவை மக்கள் செய்ய முடியும்.
அதேபோல் வீட்டிற்கு பயன்படுத்து சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வணிக சிலிண்டர் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. இதில் வணிக சிலிண்டர் வழங்குவதில் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications