குஜராத்தில் உலகின் மாபெரும் விலங்கியல் பூங்கா.. அம்பானி மூளையோ மூளை.. பின்ன சும்மாவா!
குஜராத்: உலகின் மிகப் பெரிய விலங்கியல் பூங்காவை ஆசியாவின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி குஜராத்தில் கட்டி வருகிறார்.
அம்பானி குடும்பத்தின் சொந்த மாநிலமான குஜராத்தில் உருவாகும் இந்த விலங்கியல் பூங்கா, 2023 ஆம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொமோடோ டிராகன்கள், சிறுத்தைகள் மற்றும் பறவைகள் என சுமார் 100 வகையான விலங்கினங்கள் இதில் இடம்பெறுகின்றன.
குஜராத் மாநிலத்தில் 280 ஏக்கர் நிலப்பரப்பில், ஜாம்நகர் அருகே மோதி காவ்தி பகுதியில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை அருகே இந்த பூங்கா அமைகிறது. இதில் பறவைகள், ஊர்வன உட்பட சுமார் 100 வகையான விலங்கினங்கள் இடம்பெறும்.
இதுகுறித்து ரிலையன்ஸ் குழும இயக்குநர் (கார்ப்ரேட் விவகாரம்) பரிமல் நத்வானி கூறும்போது, "இந்த பூங்கா 'கிரீன்ஸ் ஜூவாலஜிகல், ரெஸ்க்யூ அன்ட் ரிஹாபலிடேஷன் கிங்டம்' என அழைக்கப்படும். 2023 ஆண்டில் இது திறக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இதில் ஒரு முக்கியமான அம்சமாக, 'கற்பனைகளை யதார்த்தமாக மாற்றுவதற்கான பொருளாதார சக்தி அம்பானி குடும்பத்திடம் உள்ளது" என்று Campden Wealth ஆராய்ச்சி இயக்குனர் ரெபேக்கா கூச் கூறியுள்ளார். மேலும், "இது போன்ற முயற்சிகளில் முதலீடு செய்வது என்பது ஒரு குடும்பத்துக்கும் அதன் நிறுவனத்தின் இமேஜுக்கு உதவக்கூடும். இதனால் அவர்களின் லாபமும் அதிகரிக்கும், நல்ல பெயரும் ஏற்படும். குறிப்பாக, எதிர்மறையான வெளிப்பாடுகளைத் தணிக்கும். மேலும், சமுதாயம் மீதான தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவும், எதிர்காலத்தில் குடும்பத்தின் பாரம்பரியத்தை உறுதிப்படுத்தவும் இதுபோன்ற முயற்சிகள் உதவும்" என்று குறிப்பிட்டுள்ளார்.