மாஸ்க்குகள்கூட இல்லை ஒரே பயிற்சி மையத்தில் 555 சிறார்கள் குஜராத்தில் காற்றில் பறந்த கொரோனா விதிமுறை
அகமதாபாத்: கொரோனா பரவலின் 2ஆம் அலை உச்சத்தில் உள்ள நிலையில், குஜராத்தில் அரசின் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றாமல் சுமார் 555 மாணவர்கள் ஒரே பயிற்சி மையத்தில் தங்கியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக நான்கு லட்சம் வரை சென்றது. கடந்த சில தினங்களாகத் தான் கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து வருகிறது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.96 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல சுமார் 3,500 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவல்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அல்லது. ஊரடங்கிற்கு நிகரான தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவுகளுக்குப் பின்னரே, நாட்டில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும், பல்வேறு இடங்களிலும் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாமல் மக்கள் அலட்சியம் காட்டும் நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.
குஜராத் பயிற்சி மையம்
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் மாவட்டத்தில் ஜஸ்டான் என்ற நகரில் அமைந்துள்ள ஒரு பயிற்சி மையத்தில், கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் அதிக மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த பயிற்சி மையத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
ஒரே இடத்தில் 555 மாணவர்கள்
அப்போது அங்கு சுமார் 555 மாணவர்கள் வரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் 9-10 வயதுடையவர்கள் என்பது மற்றொரு அதிர்ச்சியளிக்கும் தகவலாகும். மேலும், அந்த மாணவர்கள் பெரும்பாலும், மாஸ்க்குகளை அணியாமலும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தற்போது வகுப்பறைகளில் பாடங்களை எடுக்கக் குஜராத் அரசு தடை விதித்துள்ளது. ஆனால், மாநில அரசின் எந்த விதிகளும் இந்த பயிற்சி மையத்தில் பின்பற்றப்படவில்லை.
உரிமையாளர் கைது
இது தொடர்பாகப் பயிற்சி மையத்தின் உரிமையாளர் 39 வயதான ஜெய்சுக் சங்கல்வா கைது செய்யப்பட்டார். அவர் மீது கோவிட் -19 விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனா 2ஆம் அலையில் சிறார்கள் மத்தியில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.