பரபர வாக்குப்பதிவு.. கச்சிதமாக பாஜக 'லீக்' செய்த 'ஆடியோ'.. பெரும் சிக்கலில் 'மம்தா'
கொல்கத்தா: நந்திகிராம் தொகுதி பாஜக துணைத் தலைவரிடம், மம்தா பானர்ஜி உதவி கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதைப்போல அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. குறிப்பாக அப்பர் அசாம் மற்றும் பிரம்மபுத்ரா நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ள 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட 47 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
பேரிடி
மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தாவின் ஆட்சியை எப்படியாவது அகற்ற வேண்டும் என்று பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திரிணாமுல் காங்கிரசில் மம்தாவின் நம்பிக்கைக்குரிய தலைவராக, அமைச்சராக இருந்த சுவெந்து அதிகாரியை பாஜக தங்கள் பக்கம் இழுத்தது. இது, மம்தாவுக்கு பேரிடியாக அமைந்தது என்றால் மிகையல்ல.
'கீ' கொடுத்த பாஜக
இதனால் ஆத்திரமடைந்த மம்தா, சுவெந்து அதிகாரியின் சொந்த தொகுதியான நந்திகிராமில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவரது அந்த முடிவுக்கு 'கீ' கொடுத்தது பாஜக தான். 'முடிந்தால் நந்திகிராமில் போட்டியிட்டு ஜெயித்துக் காட்டுங்கள்' என்று சவால் விட, மம்தாவும் அதை ஏற்றுக் கொண்டு களமிறங்கியுள்ளார். 'இதற்குத் தானே ஆசைப்பட்டோம் பால குமாரா' என்று நந்திகிராமில் பெரும் செல்வாக்கு நிறைந்த சுவெந்து அதிகாரியையே களமிறக்கியது பாஜக.
சவால்
இந்தியாவில், வேறெங்கும் இந்தளவுக்கு அனல் வீசியிருக்காது. அப்படியொரு மோதல் மம்தாவுக்கும், அதிகாரிக்கும் ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற பரிதவிப்பு, மற்றொரு பக்கம் தன்மானப் பிரச்சனை என்று சுழன்று கொண்டிருக்கிறார் மம்தா. அதிகாரியும், 'என்னை மீறி என் மக்களிடம் எப்படி நீங்கள் ஓட்டு வாங்குகிறீர்கள் என்று பார்க்கிறேன்' என்று சவால் விட பாஜக அனைத்தையும் அமைதியாக கவனித்து வருகிறது.
அடுக்கடுக்காக புகார்
இந்த நிலையில் தான், இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடங்கிய சில மணி நேரத்திலேயே ஏகப்பட்ட புகார்கள் பாஜக மீது. 'EVM மெஷினில் பட்டனை அழுத்தினாலே பாஜகவுக்குதான் வாக்குகள் பதிவாகிறது என்றும் திரிணாமுலுக்கு வாக்கு அளித்தாலும் பாஜகவுக்குதான் ஓட்டு பதிவாகிறது என்று மேற்கு வங்கத்தில் பாஜக மீது திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், காஷிப்பூரில் வாக்குச்சாவடிகளை பாஜக கைப்பற்றியுள்ளது என்றும் பாஜகவினர் மக்களை ஓட்டுப்போட முடியாமல் தடுக்கின்றனர்' என்றும் அடுக்கடுக்காக குற்றம் சாட்டி வருகிறது திரிணாமுல் காங்கிரஸ்.
சிக்கலில் மம்தா
இந்த நிலையில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஆடியோ ஒன்றை பாஜக தலைவர் அமித் மால்வியா வெளியிட்டுள்ளார். அதில், தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியின் பாஜக துணைத் தலைவர் Proloy Pal என்பவரிடம் மம்தா பானர்ஜி வங்க மொழியில் தொலைபேசியில் உரையாடுவது போல் உள்ளது. அதில், தனது வெற்றிக்கு உதவுமாறு மம்தா கேட்பதாக அமித் மால்வியா தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் பிரலாய், "திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் தான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாகவும், தானும் தனது குடும்பமும் பாஜகவுக்கு துரோகம் செய்ய மாட்டோம்' என்று பதில் அளித்ததாக அமித் மால்வியா கூறியுள்ளார்.