பாஜக பிரமுகர்கள் கொலைக்கு எதிராக அரசியல் யாத்திரை.. கேரளாவில் தொடங்கி வைத்தார் அமித்ஷா
திருவனந்தபுரம்: தென்மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை உயர்த்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா எடுத்து வரும் முயற்சியின் ஒரு அங்கமாக கேரளாவில் பாத யாத்திரையை இன்று அவர் தொடங்கி வைத்தார்.
கேரளாவில் மக்கள் யாத்திரை என்ற பெயரில் 15 நாட்கள் பிரசார யாத்திரையை நடத்த பாஜக முடிவு செய்தது. இந்த யாத்திரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், முதல்வருமான பினராயி விஜயனின் சொந்த ஊரான பையனூரில் இருந்து இன்று தொடங்கியது. அமித்ஷா இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். முன்னதாக தளிபரம்புவில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு சென்று பொன்குடம் காணிக்கை செலுத்தி வழிபட்டார் அமித்ஷா.
கேரள மாநில பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் முன்னிலையில் மக்கள் யாத்திரையை அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். கேரள் மாநிலம் முழுவதும் 15 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
விழாவில் அமித்ஷா பேசுகையில், பிரபல மகான்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளான ஆதி சங்கரர், ஸ்ரீ நாராயண குரு, சட்டம்பி சுவாமிகள் ஆகியோர் தோன்றிய கேரள பூமி இன்று இடதுசாரிகளின் ஆட்சியில் ரத்தம் சிந்தும் பூமியாக மாறி விட்டது. இடதுசாரிகள் ஆட்சி நடக்கும் அனைத்து மாநிலங்களிலும் அரசியல் வன்முறைகள் நடந்துள்ளதே வரலாறு.
கேரளாவில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் 120 பேர் அரசியல் வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர். பையனூர் மாவட்டத்தில் 84 பேர் கொல்லப்பட்டுள்ளனர். , இந்த கொலைகளுக்கு யார் பொறுப்பு? என்று பினராயி விஜயன் பதில் அளிக்க வேண்டும்.
வன்முறைகளை கண்டித்து 4ம் தேதி முதல் 15ம் தேதிவரை குஜராத்தில் இருந்து அசாம் வரை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நாட்டில் உள்ள அனைத்து மாநில தலைநகரங்களிலும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை நோக்கி பாஜகவினர் பாத யாத்திரை செல்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.