கர்நாடக மக்கள் பாஜகவுக்கே வாக்களித்துள்ளனர்... சொல்கிறார் அமித் ஷா!
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்துள்ளனர் என்று கட்சித் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லி: கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்றே கர்நாடக மக்கள் பாஜகவுக்கே வாக்களித்துள்ளனர் என்று அந்தக் கட்சியின் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் தேர்தல் நடந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லை.
கர்நாடக தேர்தல் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய பாஜகவின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா பேசியதாவது:
கர்நாடகா மக்கள் பாஜகவுக்கே வாக்களித்தனர். பாஜகவுக்கு 15-வது சட்டசபை தேர்தல் வெற்றியைத் தந்துள்ளனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.