தண்டவாளத்தின் நடுவில் பழுதான அரசு பஸ்: கண்ணாடி ஜன்னல்களை உடைத்து தப்பிய பயணிகள்

ஆந்திர மாநிலம் விஜயநகரத்திலிருந்து பொப்புலி என்கிற ஊருக்கு 55 பயணிகளுடன் நேற்று காலை அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பொப்புலியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தைக் கடக்க முற்பட்ட போது திடீரென பேருந்து பழுதானது. நகர மறுத்த பேருந்து சரியாக தண்டவாளத்தின் குறுக்கே சிக்கிக் கொண்டது.
இதனால் பதற்றமடைந்த பேருந்தில் இருந்த பயணிகள், ரயில் எந்நேரத்திலும் வரலாம் என அஞ்சி சற்றும் தாமதிக்காமல் பேருந்தின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து வெளியேறினர்.
உடனடியாக இது தொடர்பாக அருகில் இருந்த ரயில்வே கார்டிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கிராமமக்கள் மற்றும் பயணிகள் ஒன்று சேர்ந்து, பேருந்தை தண்டவாளத்திலிருந்து மீட்டு சாலைக்கு தள்ளி வந்தனர்.
பிறகு மாற்று பேருந்து மூலம் பழுதான பேருந்தின் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசார் அல்லது ரயில்வே அதிகாரிகள் வரும்வரைக் காத்திருக்காமல் விரைந்து செயல்பட்ட மக்களால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications