ஆந்திராவுக்கு கூடுதல் நிதி கேட்டு போராடும் அரசு, எம்பிகள்... என்ன செய்கிறது தமிழகம்?
ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் சிறப்பு நிதி கேட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் எம்பிகள் வரை போராடி வருகின்றனர், இந்த சமயத்தில் தமிழக எம்பிகள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை
டெல்லி: ஆந்திர மாநிலத்திற்கு பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் எம்பிகள் வரை அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழகத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானது இது குறித்து வாய் திறக்காமல் அரசும், எம்பிகளும் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் சாமானியர்களுக்கு சிறப்பான சலுகைகள் எதுவும் இல்லை. ஏழை மக்களை கவரும் விதமாக 10 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவ செலவு வழங்கப்படும் என்பதைத் தவிர மக்களுக்கு இனிப்பான செய்தி எதுவும் இல்லை.
இந்நிலையில் பட்ஜெட் வெளியான அடுத்த நாளே ஆந்திர மாநிலத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு போர்க்கொடி தூக்கினார். அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இது குறித்து விவாதித்த கையோடு கூட்டணி தர்மம் என்பது ஒருபுறம் இருந்தாலும் மாநில வளர்ச்சி முக்கியம்.
சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தல்
எனவே மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து ஆந்திரா வளர்ச்சிக்கு சிறப்பு நிதியை பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் எம்பிகள் தங்களால் முடிந்த வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் இதனால் சஸ்பென்ட் நடவடிக்கை பாய்ந்தாலும் அதற்காகத் தயங்கக் கூடாது என்று எம்பிகளை கேட்டுக் கொண்டார்.
புயலை கிளப்பும் எம்பிகள்
இதற்கு ஏற்றாற் போல நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிகள் ஆந்திர விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிகள் இன்று காலையில் கையில் பதாகைகளை ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஆந்திராவில் முழுஅடைப்பு
மற்றொருபுறம் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் இன்று ஆந்திராவில் முழுஅடைப்பு நடைபெற்று வருகிறது. அரசியல் ஆதாயங்களைத் தாண்டி தங்கள் மாநில வளர்ச்சிக்காக அரசு, எம்பிகள், அரசியல் கட்சிகள் என அனைவரும் ஒன்றை நிலைப்பாட்டோடு போராடி வருகின்றனர்.
தமிழகம் அமைதி காக்கிறது
ஆனால் தமிழகத்தில் தொழில்துறை பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், விவசாயமும் கடுமையான நெருக்கடியில் இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை, உள்கட்டமைப்பு மேம்பாடு என்று தமிழகத்தின் நிதி தேவை அதிக அளவில் இருக்கிறது. ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை மறுசீரமைக்கவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவி செய்யவும் அரசு கோரிய நிதியை முழுமையாக மத்திய அரசு வழங்கவில்லை.
துணை முதல்வர் பட்டும்படாமல்
பட்ஜெட்டிற்கு வரவேற்பு தெரிவித்த கையோடு தனது கடமையை முடித்துக் கொண்டார் தமிழக முதல்வர் பழனிசாமி. மற்றொருபுறம் தமிழகத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பார்த்து மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோரப்படும் என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
தன்நிறைவு பெற்றுவிட்டதா தமிழகம்
அண்டை மாநிலமான ஆந்திரா தங்களுக்கு சிறப்பு நிதி கேட்டு நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பி வருகிறது. ஆனால் தமிழகத்திற்கு பட்ஜெட்டில் தன்நிறைவு கிடைத்துவிட்டது போல அதிமுக எம்பிகள் மவுனமாக இருப்பது ஏன்? பதவிக்காக கிஞ்சித்தும் மத்திய அரசை எதிர்க்காமல் இருப்பது தான் அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு எம்பிகள் செய்யும் கடமையா?