நபிகள் நாயகத்திற்கு எதிராக ஸ்டேட்டஸ்.. வியாபாரியை கொலை செய்த 11 பேரும் தீவிரவாதிகள் - என்ஐஏ தகவல்
அமராவதி: ஆந்திராவில் சில மாதங்களுக்கு முன்பு வியாபாரி ஒருவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தததாக கைது செய்யப்பட்ட 11 பேரையும் 'தீவிரவாதிகள்' என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்துள்ளது.
முகமது நபிகளை இழிவுப்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததால் அவரை, தீவிரவாதிகள் கொலை செய்திருப்பதாக குற்றப்பத்திரிகையில் என்ஐஏ தெரிவித்துள்ளது.
மேலும், ஆந்திராவில் பல முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதத்துக்கு இந்த கும்பல் இழுக்க முயற்சி செய்து வந்ததாகவும் தனது குற்றப்பத்திரிகையில் என்ஐஏ கூறியுள்ளது.
ஆரம்பித்து வைத்த நுபுர் சர்மா
இஸ்லாமியர் பெரிதும் மதிக்கும் இறைத்தூதர் முகமது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தரக்குறைவாக பேசியிருந்தார். இவரது பேச்சு இஸ்லாமிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சை கண்டித்து பல இடங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பல இடங்களில் வன்முறைகளும் வெடித்தன.
அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகள்
இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, நுபுர் சர்மா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே, நுபுர் சர்மா பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து ராஜஸ்தானில் தையல் கலைஞர் ஒருவர் வாட்ஸ் அப்பில் பதிவிட்டதாக கூறி, அவரை 2 பேர் வெட்டிக் கொன்றனர். மேலும், அவரை கொலை செய்யும் வீடியோவையும் அவர்கள் வெளியிட்டனர். நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து, கடந்த ஜூன் 21-ம் தேதியன்று ஆந்திர மாநிலம் அமராவதியில் உமேஷ் கோலே என்ற வியாபாரி மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது மகன் முன்பே இந்த சம்பவம் அரங்கேறியது.
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்
இந்நிலையில், இதுகுறித்த விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் மேற்கொண்ட புலனாய்வின் போது, கொலை செய்யப்படுவதற்கு 2 தினங்களுக்கு முன்பு உமேஷ் கோலே, முகமது நபி குறித்து நுபுர் சர்மா பேசிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். எனவே, இந்தக் கோணத்தில் விசாரணை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பாக 11 பேரை கைது செய்தனர். அவர்கள் தல்பிகி ஜமாத் என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
11 பேரும் தீவிரவாதிகள்
இந்நிலையில், இந்தக் கொலை சம்பவம் என்ஐஏ அதிகாரிகள் தங்கள் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர். அதில், கைது செய்யப்பட்ட 11 பேரும் தல்பிகி ஜமாத் என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கொலையும் ஒரு தீவிரவாதத் தாக்குதல் எனவும் என்ஐஏ தெரிவித்திருந்தது. மேலும், அமராவதியில் பல முஸ்லிம் இளைஞர்களை இந்த கும்பல் தீவிரவாத பாதைக்கு இழுக்க முயற்சித்ததாகவும் என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.