திருப்பதி கோயிலுக்கு மேலே.. வானத்தில் பார்த்தால்.. திடீரென பறந்த ஆளில்லா விமானம்! இளைஞர் அதிரடி கைது
அமராவதி: திருப்பதி கோயில் மீது ஆளில்லா விமானம் பறந்த விவகாரத்தில் இளைஞர் ஒருவரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
என்ன நோக்கத்திற்காக கோயில் மீது ஆளில்லா விமானம் பறந்து சென்றது; கோயிலை படம்பிடித்த வீடியோ எங்கு அனுப்பப்பட்டது என்பது தொடர்பாக போலீஸார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் ஆந்திராவை சேர்ந்த கிரண் (26) என்று மட்டுமே போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் குறித்த மற்ற எந்த விவரங்களையும் வெளியிட போலீஸார் மறுத்துவிட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மேலே பறந்த ஆளில்லா விமானம்? தீவிர விசாரணையில் போலீசார்!பரபர பின்னணி
தொடரும் தீவிரவாதிகள் மிரட்டல்..
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற, பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோயில். இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் இங்கு அதிக அளவில் வருகை தருகிறார்கள். இதனிடையே, இந்தக் கோயிலுக்கு நீண்டகாலமாகவே தீவிரவாதிகளிடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதுதொடர்பாக தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் 90 பேர் கொண்ட ஆக்டோபஸ் படை வீரர்கள் கோயில் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பீதியை ஏற்படுத்திய ஆளில்லா விமானம்
இந்த சூழலில், திருப்பதி கோயிலுக்கு மேலே ஆளில்லா விமானம் ஒன்று பறந்து சென்று தத்ரூபமாக வீடியோ எடுத்ததை போன்ற காணொலி யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் நேற்று முன்தினம் முதல் வைரலாகி வருகிறது. இது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் கோபுரம் மற்றும் திருமலையின் ஆகம சாஸ்திரப்படி கோயிலுக்கு மேலே விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், எப்படி இந்த ஆளில்லா விமானம் பறந்தது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
அதிரடி கைது
இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் குறித்து ஆக்டோபஸ் பாதுகாப்புப் படையினரும், திருப்பதி போலீஸாரும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். வீடியோ எங்கிருந்து யூடியூபில் பதிவேற்றப்பட்டது என சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதை அடுத்து, அந்த குறிப்பிட்ட முகவரியில் இருந்த கிரண் (26) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீவிரவாத சதியா?
எதற்காக திருப்பதி கோயிலை ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுத்தார்கள்; அந்த வீடியோ வேறு யார் யாருக்கெல்லாம் அனுப்பி வைக்கப்பட்டது, ஆக்டோபஸ் படையினரின் கண்காணிப்பை மீறி ஆளில்லா விமானம் அங்கு பறந்தது எப்படி என்ற பல்வேறு கோணங்களில் அந்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். மேலும், தீவிரவாத சதியாக இருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.