கருப்புப் பண விவகாரம்... மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது: அன்னா ஹசாரே விமர்சனம்
டெல்லி: கருப்புப் பண விவகாரத்தில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே. இவர் தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தியில் தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :-
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் (பா.ஜனதாவினர்) வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை 100 நாட்களில் மீட்டு கொண்டு வருவோம் என்று கூறினர். நாடாளுமன்ற தேர்தலின்போது இவ்வாறு அவர்கள் வாக்குறுதி அளித்தனர். கருப்பு பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாகவும் தெரிவித்தனர். ஆனால் அவர்களால் 15 ரூபாயை கூட மீட்டு கொண்டு வரவில்லை.
பொய் வாக்குறுதி அளித்தவர்களை மக்கள் புரிந்து கொண்டனர். அவர்களுக்கு (பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு) மக்கள் பாடம் புகட்டுவார்கள். ஊழலுக்கு எதிராக 2011-ம் ஆண்டு நடைபெற்ற இயக்கம் தற்போது விழித்து கொண்டு உள்ளது.
அரசியல் கட்சிகளால் மாற்றம் கொண்டு வர முடியாது. அரசியலமைப்பு சட்டமும் அரசியலை பற்றி குறிப்பிடவில்லை. இந்தியாவை சேர்ந்த எந்த ஒரு குடிமகனும் தேர்தலில் போட்டியிடலாம் என்று தான் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. 543 சிறந்த தனிப்பட்ட நபர்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) வெற்றி பெற்று, நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் பிரதமரை தேர்ந்தெடுக்கும்போது தான் மாற்றம் ஏற்படும். இதற்கு இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும்.
மக்கள் விழித்துக்கொண்டு கட்சி அரசியலை நிராகரிக்க வேண்டும். அந்த தருணத்தில் மக்கள் தங்களது பிரதிநிதிகளாக 543 பேரை தேர்ந்தெடுக்கப்படும் போது உண்மையான ஜனநாயகம் ஏற்படும். நாட்டின் சுதந்திரத்துக்காக மக்கள் தியாகம் செய்தார்கள். ஆனால் ஜனநாயகத்துக்காக எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை.
இவ்வாறு அன்னா ஹசாரே தெரிவித்தார்.