பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற 15 நாள்களில் மீண்டும் ஒரு வாய்ப்பு?
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற தவறியவர்களுக்கு 15 நாள்களில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
டெல்லி: பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் மாற்றாதவர்களுக்கு இன்னும் 15 நாள்களில் அந்த நோட்டுகளை மாற்ற மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது. மேலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ள கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்தது.

அதன்படி அனைத்து வங்கிகள், தபால் நிலையங்களில் பழைய நோட்டை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக புதிய ரூ.2000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்தது. இதனால் மக்கள் மணிக்கணக்கில் வங்கி வாசல்களிலேயே காத்திருந்தனர்.
வெளிநாடுகளுக்கு சென்ற , வெளிநாடு வாழ் இந்தியர்களும் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்தது. இந்த நிலையில் பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ள கால அவகாசத்தை கூடுதலாக நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நேற்று தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு நீதிபதிகள் விசாரணை நடத்தியது. அப்போது அவர்கள், உண்மையான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான காரணங்களால் பழைய நோட்டுகளை மாற்ற இயலாதவர்களுக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்க வேண்டும்.
தப்பு செய்யாத மக்களை தண்டிப்பது தவறு. இதுதொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட அமர்வு நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கூறுகையில், தனக்கு 2 வாரங்கள் கால அவகாசம் கொடுத்தால் இதுகுறித்து மத்திய அரசிடம் ஆலோசனை நடத்துகிறேன் என்றார்.
இதனால் இன்னும் 15 நாள்களுக்குள் பழைய நோட்டுகளை மாற்ற மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications