பெங்களூரில் போராட்டங்கள் நடத்தினால் அந்த இடத்திலேயே கைது: போலீஸ் எச்சரிக்கை #bengaluru
பெங்களூர்: பந்த் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், மீறி போராட்டங்கள் நடத்தும் கன்னட அமைப்பினர் அதே இடத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும், காவல்துறை எச்சரித்துள்ளது.
காவிரி விவகாரத்திற்காக கடந்த திங்கள்கிழமை பெங்களூரில் கன்னட அமைப்பிர் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. தாமதமாக விழித்துக் கொண்ட காவல்துறை 16 காவல் சரகங்களில் ஊரடங்கு உத்தரவையும், மொத்த பெங்களூருக்கும் 144 தடையுத்தரவையும் பிறப்பித்தது.
ஊரடங்கு உத்தரவு நேற்று காலை முதல் விலக்கிக்கொள்ளப்பட்டாலும், 144 தடையுத்தரவு வரும் 25ம் தேதிவரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 பேருக்கு மேல் மொத்தமாக கூடினாலே கைது செய்ய இந்த சட்டப்பிரிவு வகை செய்கிறது.
இந்நிலையில், பெங்களூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற, கன்னட போராட்டக்காரர் வாட்டாள் நாகராஜ் இன்று கைது செய்யப்பட்டார். போராட்டம் முடக்கப்பட்டது.
அதேநேரம், நிருபர்களிடம் பெங்களூர் கூடுதல் போலீஸ் கமிஷனர் சரண் ரெட்டி கூறுகையில், பெங்களூரில் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இதை மீறி போராட்டம் நடத்துவது குற்றம். எனவே பெங்களூரில் எந்த ஒரு போராட்டத்தையும் நடத்த முடியாது. மீறி யாராவது போராட்டங்கள் நடத்தினால் அவர்கள் அங்கிருந்து பேரணி செல்லவோ நகரவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே இடத்தில் வைத்து அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
நாளை கர்நாடகாவில் பந்த் நடைபெற உள்ளதாக சோஷியல் நெட்வொர்க்குகளில் பரவுவது தவறான தகவல். பெங்களூரில் பந்த் நடைபெறாது. நடைபெற அனுமதிக்க மாட்டோம் என்றார்.