அடுக்கடுக்காக தொல்லை தரும் அரசு அமைப்புகள்.. வீதியில் இறங்கிய பெங்களூரில் அபார்ட்மென்ட்வாசிகள்
பெங்களூர்
Recommended Video
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சி மற்றும் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கெடுபிடிகளை கண்டித்து நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
பெங்களூரில் தொழில் வளர்ச்சி அதிகரித்ததை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகள் அதி வேகத்தில் பெருகின. பணி மற்றும் தொழில்நிமித்தமாக பெங்களூரில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த மக்களுக்கு இதுபோன்ற அடுக்குமாடி குடியிருப்புகள்தான் சொந்த வீட்டு ஆசையை நிறைவேற்றி வருகின்றன.
பெங்களூரிலுள்ள பெரும்பாலான அப்பார்ட்மென்டுகளில் கணிசமாக தமிழக மக்கள் வசிக்கிறார்கள்.
கடும் கெடுபிடி
இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கடும் கெடுபிடிகளை விதிக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்து பெங்களூர் அப்பார்ட்மென்ட் கூட்டமைப்பு (BAF) தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் கூறுகையில், "1970, 1980கள் மற்றும் 1990களில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மாசு ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட அங்கும் கட்டாயமாக கழிவுநீர் சுத்திகரிப்பு பிரிவுகளை (STPs) அமைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இது சாத்தியமில்லாதது.
கஷ்டமான விஷயம்
2007ம் ஆண்டுக்கு பிறகு முறைப்படி, கழிவுநீர் சுத்திகரிப்பு பிரிவுடன் தொடங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், கர்நாடக மாசுகட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுத்திகரித்த நீரையும் வெளியே விடக்கூடாது என்று கெடுபிடி செய்கிறார்கள். இது சாத்தியமில்லாதது. அதிகாரிகள் சொல்லும்படி கேட்காவிட்டால் மின்சாரம், குடிநீர் இணைப்புகளை துண்டித்துவிடுவோம் என்றும், கிரிமினல் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கிறார்கள். சட்டத்தை மதித்து நடக்கும் மக்கள் மீது இவ்வாறு மிரட்டல்கள் விடுக்கப்படுவது சரியல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தண்ணீருக்கு கூடுதல் கட்டணம்
பெங்களூர் அப்பார்ட்மென்ட் கூட்டமைப்பு துணை தலைவர் முரளிதர்ராவ் கூறுகையில், "தனி வீடுகளை ஒப்பிட்டால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போரிடம் 300 சதவீதம் அதிகம் தண்ணீர் கட்டம் வசூலிக்கிறது பெங்களூர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வடிகால் வாரியம். மாநகராட்சியோ, அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் திடக்கழிவு மேலாண்மை செஸ் வரி வசூலிக்கிறது. ஆனால் தரம்பிரிக்கப்பட்ட கழிவுகளை எடுத்துச் செல்ல மறுக்கிறது. கட்டணம் செலுத்தினாலும், பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாநகராட்சி தண்ணீர் இணைப்பு தருவதில்லை. இப்படியாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு எதிரான நெருக்கடிகள் முடிவில்லாமல் தொடருகின்றன" என்றார்.
வீதிக்கு இறங்கினர்
இதுபோன்ற சூழலை கருத்தில் கொண்டு, பெங்களூரை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்கள் அனைத்தும் இணைந்து இன்று போராட்டம் நடத்தின. சுமார் 150 சங்கங்கள் போராட்டத்தில் கை கோர்த்தன. அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் தங்களது அப்பார்ட்மென்ட் வெளியே வந்து கையில் பதாகைகளுடன் மவுனமாக மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.
மக்கள் பேரணி
ஜேபிநகர் 6வது பேஸ் பகுதியில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கி அருகே அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் பேரணியும் நடத்தினர். மவுனமாகவே தங்களது எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர். கையில் தாங்கள் அனுபவிக்கும் நெருக்கடிகள் தாங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அரசு தரப்பில் இவர்கள் கோரிக்கையை பரிசீலிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் உள்ளது.