என்னது அத்வானியா- அப்படின்னா யாரு? சீக்கிரம் கேட்கப் போகிறது பா.ஜ.க.?
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி அக்கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படாமல் தொடர்ந்தும் ஓரம்கட்டப்பட்டு வருகிறார்.. டெல்லியில் நேற்று நடைபெற்ற எமர்ஜென்சி தொடர்பாக கருத்தரங்குக்கும் அத்வானி அழைக்கப்படவில்லை.
1975ஆம் ஆண்டு இந்திரா ஆட்சிக் காலத்தில் எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டது. இந்த எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடிய தலைவர்களில் வாஜ்பாய், அத்வானியும் அடங்குவர். இருவரும் எமர்ஜென்சி காலத்தில் சிறைவாசமும் அனுபவித்தவர்கள்.
அண்மையில்கூட எமர்ஜென்சி குறித்து ஆங்கில நாளேட்டுக்கு அத்வானி அளித்திருந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு விளக்கம் அளித்து அத்வானி கொடுத்த பேட்டியும் பாரதிய ஜனதாவின் உட்கட்சி பூசலை அம்பலப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் எமர்ஜென்சி கொடுமைகளை நினைவு கூறும் நிகழ்ச்சிகள் நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்டன. டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். இயக்க ஆதரவுடன் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதாவின் தலைவர் அமித்ஷா உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்வானிக்கு மட்டும் அழைப்பு விடுவிக்கப்படவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சியின் 35வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன. அந்த நிகழ்ச்சிகளுக்கும் கூட அத்வானி அழைக்கப்படவில்லை. ஏற்கெனவே பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அத்வானி, தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளிலும் ஓரம்கட்டப்பட்டு வருவது அவரது ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.