ஒடிசா சுகாதார அமைச்சர் நபா தாஸ் சுட்டுக்கொலை.. உதவி எஸ்ஐ வெறிச்செயல்! யார் இவர்? மனைவி பகீர் தகவல்
ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த உதவி எஸ்ஐ கோபால் தாஸ் பற்றிய விஷயங்களை அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வர்: ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸை இன்று உதவி எஸ்ஐ மோகன் தாஸ் திடீரென்று துப்பாக்கியால் சுட்டார். இதில் நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் அமைச்சர் நாபா நபா கிஷோர் தாசுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது காலமானார். இந்நிலையில் தான் துப்பாக்கியால் சுட்டு அமைச்சரை கொன்றதாக உதவி எஸ்ஐ கோபால் தாஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை பற்றிய பகீர் தகவலை மனைவி கூறியுள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதாதளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். நவீன் பட்நாயக் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக நபா கிஷோர் தாஸ்.
பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான இவர் நவீன் பட்நாயக்குடன் மிகவும் நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று மதியம் நபா கிஷோர் தாஸ் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜ்ராஜ் நகர் அருகே உள்ள காந்தி சவுக் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
மாட்டிறைச்சி.. மின்கம்பத்தில் கட்டிவைத்து அசாம் இளைஞர் மீது கொடூர தாக்குதல்.. பரபர கர்நாடகா.. ஷாக்
அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு
இதையடுத்து நபா கிஷோர் தாஸ் காரில் இருந்து இறங்கினார். இந்த வேளையில் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 4 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படும் நிலையில் நபா கிஷோர் தாஸின் நெஞ்சில் குண்டுகள் பாய்ந்தன. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் அப்படியே சரிந்து கீழே விழுந்தார். இதையடுத்து உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் மரணம்
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அதன்பிறகு அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் புவனேஸ்வர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் ஐசியூவில் அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உதவி எஸ்ஐ அதிரடி கைது
இந்நிலையில் தான் அமைச்சர் நபா கிஷோர் தாஸை போலீஸ் அதிகாரியே துப்பாக்கியால் சுட்ட தகவல் வெளியாகி உள்ளது. அதாவது உதவி சப் இன்ஸ்பெக்டரான கோபால் தாஸ் தான் அமைச்சர் நபா கிஷோர் தாஸை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது. தற்போது அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எதற்காக அமைச்சரை துப்பாக்கியால் சுட்டார் என்பது பற்றி இன்னும் எந்த தகவலையும் போலீசார் வழங்கவில்லை.
மனைவி சொன்ன பகீர் தகவல்
இந்நிலையில் தான் உதவி சப் இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் பற்றி அவரது மனைவி ஜெயந்தி தாஸ் சில விஷயங்களை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛ இன்று என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. நான் வீட்டில் இருந்தபோது இந்த சம்பவம் பற்றி கேள்வி பட்டேன். காலையில் மகளுடன் என் கணவர் வீடியோ காலில் பேசினார். அவர் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதில் இருந்து குணமாக வேண்டி சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த மருந்துகளை எடுத்த பிறகு அவர் சரியாக நடந்து வந்தார். கடைசியாக அவர் வீட்டுக்கு வந்து 5 மாதங்கள் ஆகிறது'' என்றார்.
மனநலம் பாதிக்கப்பட்டவாரா?
இதனால் அமைச்சரை துப்பாக்கியால் சுட்ட கோபால் தாஸ் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக எந்த விபரங்களையும் போலீசார் இன்னும் தெரிவிக்கவில்லை. மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு இதுபற்றி விபரங்களை போலீசார் தெரிவிக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.