அஸ்ஸாம் வன்முறையில் 15 பேர் பலி! 13 அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு!!
கோலாகட்: நாகாலாந்து எல்லையில் வன்முறை சம்பவங்களைக் கட்டுப்படுத்த தவறிய அஸ்ஸாம் மாநில அரசைக் கண்டித்து அஸ்ஸாம் கன பரிஷத் விடுத்திருந்த 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமை சேர்ந்த 9 பேர் நாகாலாந்து பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து நாகாலாந்து எல்லைப் பகுதியான கோலாகட் என்ற இடத்தில் அஸ்ஸாம் மாநிலத்தவர் போராட்டம் நடத்தினர். அப்போது நாகாலாந்து பகுதியில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. அஸ்ஸாம் மாநில அரசு தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி பல்வேறு அஸ்ஸாமிய அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இது தொடர்பான வன்முறைகளில் மொத்தம் 15 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 3 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த வன்முறைகள் தொடர்பான அறிக்கையை பிரதமர் அலுவலகத்திடம் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று சமர்ப்பித்தது. இரு மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனிடையே நிலைமையை கட்டுப்படுத்த தவறிய மாநில அரசைக் கண்டித்து அஸ்ஸாம் கன பரிஷத் கட்சி, 12 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இதற்கு 13 அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
இன்று காலை முதல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருவதால் அஸ்ஸாம் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது. நாகாலாந்து எல்லைப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான நிலைமை நீடித்து வருகிறது.