யாராவது ராஜா வருகிறாரா? தமக்காக போக்குவரத்தை நிறுத்திய போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் கண்டித்த முதல்வர்
கவுகாத்தி: இன்றைய எந்திர உலகில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கார்கள், இரு சக்கர வாகனங்கள் பல்கி பெருகி விட்டன. இதனால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் அதிகரித்து விட்டதால் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்கதையாகி விட்டது.
இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத தலைவலியாக உள்ளது. காலை, மாலை நேரங்களில் இந்த நகரமே ஸ்தம்பித்து விடும்.
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு.. எதற்கெல்லாம் தடை? எதற்கு அனுமதி
போக்குவரத்து நெரிசல் வாடிக்கை
அதுவும் மாநில முதல்வர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் போன்ற வி.ஐ.பி.க்கள் வந்தால் அவர்களுக்காக போக்குவரத்து நிறுத்தப்படுவதால் கூடுதல் நெரிசல் பல இடங்களில் ஏற்படுகிறது. இந்த நிலையில் தனது வருகைக்காக போக்குவரத்தை நிறுத்திய போலீஸ் அதிகாரியை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா நடுரோட்டில் கண்டித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
முதல்வர் செல்வதற்காக போக்குவரத்து நிறுத்தம்
நாகோன் மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தனது வாகனத்தில் பயணம் செய்தார். அவரது வாகனத்துக்கு முன்னால், பின்னால் பாதுகாப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. முதல்வர் சென்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பேருந்து, கார்கள் உள்ளிட்ட நீண்ட வரிசையில் காத்திருந்தன.
நடுரோட்டில் கண்டித்த முதல்வர்
இதனை பார்த்த முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தும்படி கூறினார். உடனடியாக அதில் இருந்து இறங்கிய அவர் அங்கு பணியில் இருந்த நாகோன் மாவட்ட காவல்துறை துணை ஆணையர் நிசார்க் ஹிவாரேவை அழைத்தார். ''என்ன இது? எதுக்கு வண்டியெல்லாம் நிறுத்திட்டீங்க? எதற்காக இதை செய்தீர்கள், யாராவது ராஜா வருகிறாரா?'' என்று காவல்துறை துணை ஆணையரை கண்டித்தார். தொடர்ந்து தன்னால் மக்கள் கஷ்டபடக்கூடாது. எதிர்காலத்தில் இது போன்று செய்யக் கூடாது என்று போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது
இந்த சம்பவம் குறித்து பேசிய முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "எனது பயணத்தின் போது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என தெளிவான உத்தரவுகள் இருந்தபோதிலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நான் கண்டித்தேன். 15 நிமிடங்களுக்கு மேலாக, ஆம்புலன்ஸ்கள் உட்பட தேசிய நெடுஞ்சாலை முடக்கப்பட்டது. இந்த வி.ஐ.பி. இன்றைய அஸ்ஸாமில் கலாச்சாரம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை'' என்று கூறினார்.
மற்ற முதல்வர்களும் இதை பின்பற்ற வேண்டும்
அசாம் முதல்வரின் இந்த செயல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தொடர்பான வீடியோவை பார்த்த பலரும் அசாம் முதல்வரை பாராட்டி வருகின்றனர். மற்ற மாநிலங்களின் முதல்வரும் இதுபோல் செய்ய வேண்டும் என்று அவர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.