நாளை மறுநாள் நடைபெற வேண்டிய ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு அப்பீல் விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை வரும் 8ம் நடைபெறாது என உச்ச நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளதால் விசாரணை தாமதமாகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நால்வரையும் சிறைக்குள் தள்ளியது.
ஆனால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில், அப்பீலின்போது, நீதிபதி குமாரசாமி அந்த தண்டனையை முற்றாக தள்ளுபடி செய்தார்.
சுப்ரீம்கோர்ட்
இதனை எதிர்த்து, கர்நாடக மாநில அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜெயலலிதா உட்பட நால்வர் தரப்பிலும் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இருவர் பெஞ்ச்
கடந்த நவம்பர் 23ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
ஜனவரி 8க்கு ஒத்திவைப்பு
"மனுதாரர் மற்றும் எதிர்தரப்பின் சார்பில், ஆயிரக்கணக்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு முன்பாக இரு தரப்பினரும் இறுதிவாதம் தொடர்பான தொகுப்பை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கும்" என நீதிபதிகள் தெரிவித்து, வழக்கை ஜனவரி 8ம் தேதி ஒத்திவைத்தனர்.
வக்கீல்கள் தீவிரம்
இதையடுத்து கர்நாடக அரசு, திமுக தரப்பு மற்றும் ஜெயலலிதா தரப்பு சார்பில் இறுதிவாத தொகுப்பு உச்ச நீதிமன்றத்தில் டிசம்பரில் செய்யப்பட்டது. ஜனவரி 8ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், அதற்கான தயாரிப்புகளில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
விடுமுறை
இந்நிலையில் ஆண்டு இறுதி விடுமுறைக்கு பின், உச்ச நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. எனவே, இந்த வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகள் தொடர்பான இறுதி பட்டியலை உச்ச நீதிமன்ற பதிவுத்துறை அலுவலகம் நேற்று வெளியிட்டது.
ஒத்திவைப்பு
அந்த பட்டியலில், ‘உச்ச நீதிமன்றத்தில் அதிகப்படியான முக்கிய வழக்குகள் தேங்கிகிடப்பதால் நீதிபதிகளுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு வரும் 8ம் தேதி விசாரிக்கப்பட மாட்டாது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓரிரு வாரங்கள் ஆகலாம்
எனவே, இன்னும் ஓரிரு வாரங்கள் கழித்த பிறகே வழக்கு விசாரணைக்கு வரும் வாய்ப்பு உள்ளது. சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த, தத்து ஓய்வுபெற்று, டி.எஸ்.தாக்கூர் அந்த பதவிக்கு வந்துள்ளார். பொதுவாகவே, தலைமை நீதிபதி மாறும்போது, விசாரணை பெஞ்சுகளிலும் மாற்றங்கள் நடக்கும்.
ஜெ. தரப்பு
ஜெயலலிதா வழக்கை விசாரிக்கும் பி.சி.கோஷ், அகர்வால் பெஞ்ச்சில் அகர்வாலுக்குப் பதில் வேறொரு நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதி முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஜெ. தரப்பை பொறுத்தவரை சொத்துக் குவிப்பு வழக்கை தகர்க்கணும் என்பதில் குறியாக உள்ளனர்.
திட்டம்
சொத்துக் குவிப்பு வழக்கை அப்பீல் செய்யும் தகுதி கர்நாடக அரசுக்கோ, தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கோ இல்லைங்கிற வாதத்தை அழுத்தமாக வைக்க திட்டமிட்டுள்ளது ஜெ. தரப்பு.