கணக்கு சரியாத்தான் வருது.. குமாரசாமி தீர்ப்பு சரியே.. சுப்ரீம் கோர்ட்டில் ஜெ. மனு
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்றும், தீர்ப்பில் வருமானம் எல்லாம் சரியாகவே கணக்கிடப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா புதியமனு தாக்கல் செய்துள்ளார்.
12 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி 4 ஆண்டுகள் சிறைதண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா தனது முதல்வர்பதவியை இழந்தார். அவருடைய எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது.
நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பையும், தண்டனையையும் எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த கார்நாடக கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, பெங்களூரு தனிநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த ஆண்டு மே மாதம் விடுதலையடைந்தனர். ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரானார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் பதவியேற்றார். இதனிடையே ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, கர்நாடக அரசும், திமுகவின் அன்பழகனும் உச்சநீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்துள்ளனர்.
கடந்த 8ம் தேதி இந்த வழக்கு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜெயலலிதா உள்ளிட்டோர் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு, அன்பழகன் ஜெயலலிதா ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும் தினமும் வழக்கை விசாரிப்பது குறித்து பிற வழக்குகளை பொருத்து முடிவு செய்யப்படும். ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான் சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 2 ந்தேதி முதல் இறுதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
கணிதபிழைகள்
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கணித பிழை உள்ளிட்ட 16 முக்கிய குறைபாடுகளை சுட்டி காட்டி 7 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவாக தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக 16 முக்கிய குறைபாடுகள் இருக்கிறது என்று 7 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
குமாரசாமியின் கணக்கு
இதில் நீதிபதி குமாரசாமி தெரிவித்த பட்டியலின்படி ஜெயலலிதா தரப்பில் பெற்ற கடன் 10 கோடியே, 67 லட்சத்து 31,274 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதனை 24 கோடியே 17 லட்சத்து 31,274 ரூபாய் என நீதிபதி தெரிவித்துள்ளதாக கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளது. கூட்டுத்தொகையில் உள்ள பிழையை சரிசெய்து பார்த்தால், ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக 76.7 சதவீதம் சொத்து சேர்த்தது தெரியவரும் என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க இந்த ஆவணத்தை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
7 பக்க ஆவணங்கள்
கர்நாடாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா, தனது தரப்பு வாதத்தை முன் வைக்க நீதிபதி குமாரசாமி அனுமதிக்கவில்லை என்பதையும் கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளது. தனி நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில், 16 முக்கிய குறைபாடுகளை சுட்டிகாட்டி கர்நாடக அரசு, 7 பக்கங்கள் கொண்ட கூடுதல் ஆவணத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
ஜெயலலிதா புதிய மனு தாக்கல்
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டிய அம்சங்கள் பற்றி ஜெயலலிதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என அம்மனுவில் ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும் தீர்ப்பில் வருமானம் எல்லாம் சரியாகவே கணக்கிடப்பட்டுள்ளது எனவும் கருத்து ஜெயலலிதா கூறியுள்ளார்.