சாலை தொடங்கி கல்வி வரை.. இந்தியாவின் நிறத்தை மாற்றிய வாஜ்பாயின் ஐந்து திட்டங்கள்!
இந்தியாவின் நிறத்தை மாற்றிய பல முக்கிய திட்டங்களை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அறிமுகப்படுத்தி உள்ளார்.
Recommended Video
டெல்லி: இந்தியாவின் நிறத்தை மாற்றிய பல முக்கிய திட்டங்களை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அறிமுகப்படுத்தி உள்ளார். இப்போதும் கூட இந்தியாவில் அந்த திட்டங்கள் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றால் அது மிகையாகாது.
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
93 வயது நிரம்பியுள்ள அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இவருக்கு சர்க்கரை வியாதி இருந்தது.
தங்க நாற்கர சாலை திட்டம்
வாஜ்பாயின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று என்றால், அது கண்டிப்பாக தங்க நாற்கர சாலையாகத்தான் இருக்கும். இந்த சாலைதான் தற்போது இந்திய தேசிய போக்குவரத்திற்கு அடித்தளமாக உள்ளது. சென்னை, கொல்கத்தா, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களை இணைக்கும் இந்த சாலை தற்போது சிறு சிறு நகரங்களுக்கும் நீண்டு செல்ல இவர்தான் காரணம்.
தனியார்மயமாக்கம் திட்டம்
அரசு நிறுவனங்கள் சிலவற்றை தனியார்மயமாக்கி, தனியார் மயத்திற்கு வித்திட்டது இவர்தான். ஆம், அப்போது மூழ்கும் நிலையில் இருந்த சில அரசு நிறுவனங்களை, தனியாருக்கு கொடுத்து, அதை காப்பாற்றியது இவர்தான். ஹிந்துஸ்தான் சின்க், பாரத் அலுமினியம் கம்பெனி, இந்தியன் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை தனியாருக்கு அளித்தார்.
இந்தியாவின் ஜிடிபி
இவருடைய ஐந்து ஆண்டு ஆட்சியில்தான் இந்தியாவின் ஜிடிபி மிகவும் நிலையாக இருந்தது. அதேபோல் இவருடைய ஆட்சியில் சராசரியாக இந்தியாவின் ஜிடிபி உயர்ந்து கொண்டே சென்றது. அதேபோல் 1998ல் இருந்து அடுத்த ஐந்து வருடம் இந்தியாவின் நிதியாண்டு அறிக்கை மிகவும் நிலையாக இருந்தது.
தொலைத்தொடர்பு துறை
இவரது ஆட்சியில்தான் தொலைத்தொடர்பு துறை அசாத்திய மாற்றத்தை கண்டது. கட்டண முறைகளை மாற்றி ஏல முறைகளை அறிமுகபடுத்தினார். அதேபோல், பிஎஸ்என்எல் இவரால்தான் பெரிய வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் 2ஜி நெட்வொர்க் எப்படி புரட்சியை ஏற்படுத்தியதோ, அதேபோல் இவர் டெலிகாம் துறையில் கொண்டு வந்த சட்டங்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அனைவருக்கும் கல்வி
சர்வ சிக்ச அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி என்று இவர் கொண்டு வந்த திட்டம்தான் இந்தியாவில் கல்வியில் பெரிய புரட்சியை கொண்டுவந்தது. கல்வி செல்லாத வடமாநில கிராமங்களில், கல்வியை கொண்டு செல்ல இந்த திட்டம் உதவியது. இந்த திட்டம் வந்த 4 ஆண்டுகளில் பள்ளியில் இடைநிற்கும் மாணவர்களில் எண்ணிக்கை 60 சதவிகிதம் குறைந்தது.