உ.பி தலித் சகோதரிகள் மரணத்தில் திருப்பம்.. கொலை செய்யப்படவில்லை, தற்கொலையே: சிபிஐ தகவல்
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரு தலித் சகோதரிகள் மரண வழக்கில் புதுத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இவருவரும் கொலை செய்யப்படவில்லை, தற்கொலையே செய்து கொண்டதாக சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இதன் அறிக்கை நாளை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்திரப் பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் உள்ளது பதான் கிராமம். இங்கு கடந்த மே மாதம் 27ம் தேதி இரவு இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வெளியில் சென்ற இரண்டு தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். மறுநாள் காலை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சகோதரிகள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இக்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. விசாரணை அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது சிபிஐ.
அந்த அறிக்கையில், தலித் சகோதரிகள் இருவரும் கொலை செய்யப்படவில்லை, தற்கொலையே செய்து கொண்டனர். எனவே கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் விடுவிக்கலாம் என கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக குடும்பத்தாரே, பலாத்காரம் செய்யப்பட்ட சகோதரிகளை கவுரவக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டதும் நினைவிருக்கலாம்.
இருப்பினும் இந்த விவகாரத்தில் சிபிஐ அவசரம் காட்டக் கூடாது என்றும் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் மகளிர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வழக்கில் பப்பு யாதவ், அவதேஷ் யாதவ், ஊர்வேஷ் யாதவ் என்ற சகோதரர்களும், போலீஸ் காரர் சத்ரபால் யாதவ், சர்வேஷ் யாதவ் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications