சிறையிலிருந்து அவ்வப்போது வெளியே வந்த சசிகலா.. சிறை அதிகாரி காரில் ஜாலி ரவுண்ட்! அதிர்ச்சி தகவல்
பெங்களூரு சிறையில் இருந்து கொண்டே அவ்வபோது அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அதிகாரி காரில் ரகசிய உலா போனதாக ஜெயிலர் ஒருவர் எழுதியுள்ள மொட்டை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா அவ்வபோது ரகசியமாக காரில் சென்று வந்ததாக ஜெயலர் ஒருவர் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பிப்ரவரி முதல் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரு பரபப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும் இதற்காக அவரிடம் இருந்து ரூ.2 கோடி வரை கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.சத்திய நாராயணா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த பகிரங்க குற்றச்சாட்டை சிறைத்துறை டிஐஜி ரூபா தெரிவித்திருந்தார். இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் ரூபா கூறியதால் கர்நாடகா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் டிஐஜி ரூபாவிற்கு இந்தத் தகவல்கள் எப்படி கிடைத்தன என்பதற்காக பரபரப்பு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
பகீர் கடிதம்
சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக ரூபா பொறுப்பேற்ற பிறகு அவருக்கு ஒரு மொட்டை கடிதம் வந்தது. அந்த கடிதத்தை பெயர் குறிப்பிடாமல் ஜெயிலர் ஒருவர் எழுதி இருந்தார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் போதைப்பொருள் நடமாட்டம் எப்படி இருக்கிறது என்று அதில் கூறப்பட்டிருந்தது.
பணத்தை அள்ளிய அதிகாரிகள்
மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சிறைத்துறை டி.ஜி.பி., ஐ.ஜி., சிறைச்சாலையில் இருக்கும் ஜெயிலர், சிறைக் கண்காணிப்பாளர், சிறை மருத்துவர், சிறை காவலாளிகள் ஆகியோருக்கு கடந்த 5 மாதங்களாக கை நிறைய பணம் கொடுக்கப்பட்டது என்று பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.
Recommended Video
லஞ்சம் வாங்க துண்டுசீட்டு சிக்னல்
சிறையில் சசிகலாவுக்கு மாடுலர் கிச்சன் என்ற நவீன சமையல் அறை வசதி செய்து கொடுக்க சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டு உள்ளது. சிறையில் கொடுக்கும் வெள்ளை நிற துண்டு சீட்டினை வெளியில் உள்ள சசிகலாவின் உறவினரிடம் கொடுத்தால் அவர் வேலைக்கு தகுந்தாற்போல் பணம் கொடுப்பார்.
வெளியில் வந்தாரா சசிகலா?
மேலும் சிறையில் உள்ள வி.வி.ஐ.பி. சிறைத்துறை உயர் அதிகாரியின் காரில் சிறையில் இருந்து முக்கால் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு 3 முறை சசிகலா சென்று வந்துள்ளார். ஏற்கனவே சிறையில் சசிகலா அனைத்து வசதிகளையும் அனுபவித்து வருவதாக சர்ச்சை எழுந்த நிலையில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததாக மற்றொரு பகீர் தகவல் கிடைத்துள்ளது.
சுகபோகமாக இருக்கும் கைதிகள்
குற்றவாளிகள் குற்றத்தை உணர வேண்டி மனம் திருந்துவதற்கான தண்டனைக்கான இடமாக இருக்க வேண்டிய சிறைக்குள் அனைத்து கைதிகளுக்கும் எல்லா வசதிகளும் கிடைக்கிறது. இந்தச் சிறையில் உள்ள கைதிகளுக்கு வெளியில் இருந்து உணவு, மருந்து பொருட்கள், பேக்கரி உணவு வகைகள், சிகரெட், பீடி, குட்கா, கஞ்சா ஆகிய போதை பொருட்கள் சுலபமாக கிடைக்கின்றன.
ஆதாரத்துடன் நிரூபிப்பு
இதற்காக பலருக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கடித்தத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கடித்தின் அடிப்படையிலேயே ரூபா அனைத்துத் தகவல்களையும் திரட்டி ஆதாரங்களுடன் கொடுத்துள்ளார்.