விஸ்வரூபமெடுக்கும் சிறுமி பாலியல் பலாத்கார பிரச்சினை... கர்நாடக அரசுக்கு சதானந்த கவுடா எச்சரிக்கை!
பெங்களூர்: தொடர் பாலியல் பலாத்கார சம்பவங்களில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய அரசு தலையிடும்' என கர்நாடக அரசுக்கு மத்திய அமைச்சர் சதானந்த கவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியொன்றில் ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவர், அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் காவலாளியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது தொடர்பாக அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வர்த்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்வி கற்கும் இடத்தில் நடந்த இந்த அக்கிரமத்தைக் கண்டித்து கடந்த சில நாட்களாக, அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நேற்றும் பள்ளிக்கூடத்தின் முன்பு போராட்டமும், மவுன ஊர்வலமும் நடத்தப்பட்டது. இதையொட்டி, அந்த தனியார் பள்ளிக்கூடத்தின் முன்பு நேற்று காலையில் பெற்றோர் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் பள்ளிக்கூடத்தில் இருந்து எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்கள்.
ஆர்ப்பாட்டம்...
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கும், சிறுமிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு நீதி வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மவுனமாக சென்றார்கள். போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
8 பேர் கைது...
இதற்கிடையே, அந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 90 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாகவும் கூடுதல் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.
தலைகுனிவு...
இந்நிலையில் இது தொடர்பாக நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-
‘பெங்களூர் மற்றும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் பாலியல் பலாத்கார சம்பவங்களால் கர்நாடகத்திற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
தோல்வி...
பெங்களூரில் தொடர்ந்து நடைபெற்ற பாலியல் பலாத்காரங்கள், தேசிய அளவில் மிகப்பெரிய செய்தியாகி உள்ளது. பாலியல் பலாத்காரங்களை தடுப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது.
கடமை தவறிய மாநில அரசு...
அந்த சம்பவங்களை தடுத்து நிறுத்த முதலமைச்சர் சித்தராமையாவும், போலீஸ் அமைச்சர் ஜார்ஜும் தவறிவிட்டார்கள். மாநில மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை போலீஸ் அமைச்சருக்கு உள்ளது.
சட்ட ஒழுங்கு சீர்கேடு...
கர்நாடகத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவங்களால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போய் விட்டது. சமூக விரோதிகளை கட்டுப்படுத்த அரசால் முடியவில்லை.
மத்திய அரசு தலையிடும்...
மாநிலத்தில் நடைபெற்று வரும் பலாத்கார சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதே நிலைமை கர்நாடகத்தில் தொடர்ந்து நீடித்ததால், பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு தலையிடுவது தவிர்க்க முடியாது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.