ஐயகோ.. என்னே இந்த ஐடி தலைநகருக்கு வந்த சோதனை! பெங்களூரில் 4 மணி நேரம் மின்வெட்டு அமல்
பெங்களூர்: நாட்டின் ஐடி துறை தலைநகரான பெங்களூரில் முதலில் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்ட நிலையில், அது, 3 மணிநேரமாக கூட்டப்பட்டு, இப்போது அது 4 மணி நேரமாக அதிகரித்துவிட்டது. இதனால் பெங்களூர் மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
கர்நாடக அணைக்கட்டுகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால், நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பெங்களூரில் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் ஜெயச்சந்திரா 10 நாட்கள் முன்புதான் அறிவித்திருந்தார். அவர் சொல்லி வாய்மூடுவதற்குள் மின்வெட்டும் அமலுக்கு வந்தது. காலையிலும், இரவிலும் தலா 1 மணிநேரம் மின்வெட்டு செய்யப்பட்டது.
இந்நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் பெங்களூரில் மின்வெட்டு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுவதாக பெங்களூர் மின்சார சப்ளை நிறுவனம் (Bescom) அறிவித்தது. காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்குள், 3 முறை தலா 1 மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்கப்போகிறோம் என்று பெஸ்காம் கூறியது.
3 மணி நேரம் மின்வெட்டால் பெங்களூர் நகர மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மழையால் கொசுத்தொல்லை அதிகரித்து, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவும் நிலையில், கொசு காயில்களை கொளுத்தவும் மின்சாரம் இல்லாமல் மக்கள் புலம்புகிறார்கள்.
இந்நிலையில், அடிமேல் மற்றொரு அடியாக, இனிமேல் 4 மணி நேரம் மின்கட் செய்யப்படும் என்று பெஸ்காம் அறிவித்துள்ளது. இதனால் பெங்களூர்வாசிகள் கடும் அவஸ்தைப்படுகின்றனர். மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தையும் பெஸ்காம் வெப்சைட் தாறுமாறாக கொடுப்பதால் மக்களுக்கு அதனால் எந்த பயனும் இல்லை.
சமீபத்தில் நடந்த பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் மக்கள் மீண்டும் பாஜகவையே தேர்ந்தெடுத்தனர். இந்த கோபத்தை ஆளும் காங்கிரஸ் அரசு இப்படி தீர்த்துக்கொள்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.