மோடி, மெர்க்கல் வருகை: சன்டே ஓவர்டைம் பார்த்த பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள்
பெங்களூர்: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வருகையையொட்டி பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஓவர் டைம் பார்த்துள்ளனர்.
இந்தியா வந்துள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இன்று டெல்லியில் இருந்து பெங்களூர் வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் நாளை பெங்களூர் வருகிறார்கள். மெர்க்கலும், மோடியும் பெங்களூரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.
மெர்க்கலும், பிரணாபும் அடுகோடியில் உள்ள பாஷ் நிறுவனத்திற்கு நாளை செல்கிறார்கள். இந்நிலையில் அவர்களின் வருகையையொட்டி குண்டும்குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்யும் பணியில் பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சாலைகளில் உள்ள குழிகளை ஊழியர்கள் சரி செய்தனர். பழைய ஏர்போர்ட் ரோட்டை சரி செய்தனர், அந்த பகுதியில் இருந்த சுவரொட்டிகளை கிழித்தெறிந்தனர். மேலும் லீலா பேலஸ் ஹோட்டல், ஓசூர் ரோடு பகுதியையும் ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
இது குறித்து பெங்களூர் மாநகராட்சி கமிஷனர் ஜி. குமார் நாயக் கூறுகையில்,
மழையையும் பொருட்படுத்தாது துரிதமாக வேலை பார்த்து வருகிறோம். சாலைகளை சரிசெய்வதுடன் போஸ்டர்களையும் கிழித்து வருகிறோம். தசரா பண்டிகையையொட்டி எந்தெந்த சாலைகள் சரி செய்யப்படும் என்பதை மேயர் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பார். தற்போது விவிஐபிக்கள் வரும் பாதைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த வேலை தசரா வரை தொடரும். தசராவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள். அவர்கள் நகரை பார்த்து முகம் சுளிக்கக் கூடாது என்றார்.