மாட்டுக்கறி விருந்தில் பங்கேற்பு.. கன்னட பெண் எழுத்தாளர் சேத்தனாவுக்கு பலாத்கார மிரட்டல்!
பெங்களூர்: மாட்டிறைச்சி விருந்தில் கலந்து கொண்டு மாட்டிறைச்சி சாப்பிட்ட கன்னட பெண் எழுத்தாளர் சேத்தனா தீர்த்தஹள்ளிக்கு ஃபேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்தவர் பிரபல கன்னட எழுத்தாளர் சேத்தனா தீர்த்தஹள்ளி. அவர் சினிமா படங்களுக்கு திரைக்கதை எழுதி வருகிறார். இலக்கிய இதழ்களில் பெண் விடுதலை குறித்து எழுதி வருகிறார். பல்வேறு பத்திரிக்கைகளில் இந்து மத கலாச்சாரங்கள் பற்றி கேள்வி எழுப்பி கட்டுரைகள் எழுதியுள்ளார்.
மாட்டிறைச்சிக்கு எதிரான தடையை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு மாட்டிறைச்சி சாப்பிட்டார். இதையடுத்து அவருக்கு ஃபேஸ்புக், போன் மூலமாக கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் அவரை பாலியல் பலாத்காரம் செய்து, அவரின் முகத்தில் ஆசிட் வீசப் போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுசூதன் கவுடா என்பவர் ஃபேஸ்புக்கில் சேத்தனாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து சேத்தனா ஹனுமந்த நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுசூதன் கவுடாவை கண்டுபிடிக்குமாறு அவர்கள் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து சேத்தனா கூறுகையில்,
கன்னட எழுத்தாளர் கல்பர்கி கொலை வழக்கு விசாரணையில் இன்னும் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் எனக்கு கொலை மிரட்டல் வருவதால் நான் அஞ்சுகிறேன். எனக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் தான் போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றார்.