'டச் ஸ்கிரீன்' போன் வாங்கித் தர தந்தை மறுப்பு: பூச்சி மருந்து குடித்து 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் உயர்ரக செல்போன் வாங்கித் தர தந்தை மறுத்ததால், மனமுடைந்த 8ம் வகுப்பு மாணவர் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளம் மாநிலம், முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள டெண்ட்டுலியா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மபிபுல் சர்க்கார். இவரது மகன் மசுத் சர்க்கார்(15), அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.
தன் நண்பர்கள் சிலர் டச் ஸ்கிரீன் செல்போன் பயன்படுத்துவதைப் பார்த்து, தனக்கும் அதுபோல் ஒன்று வேண்டும் என தந்தையிடம் நச்சரித்துள்ளான் மசுத். ஏற்கனவே வீட்டில் இரண்டு சாதாரண போன்கள் உள்ளதாலும், டச் ஸ்கிரீன் செல்போன் வாங்குமளவிற்கு பொருளாதார வசதி இல்லாததாலும், மகனின் ஆசைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மபிபுல்.
இதனால் மனமுடைந்த மசுத், நேற்று முன்தினம் இரவு, விவசாயத்திற்காக மபிபுல் வாங்கி வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டான். வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்த மசுத்தை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர் அவனது பெற்றோர்.
ஆனபோதும், சிகிச்சைப் பலனில்லாமல் நேற்று மசுத் பரிதாபமாக உயிரிழந்தான்.
மசுத்தின் நினைவாக அவனது பள்ளியில் இன்று இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அப்பள்ளித் தலைமையாசிரியர், ‘படிப்பில் படுசுட்டியாக இல்லாவிட்டாலும், மரியாதை மற்றும் நல்லொழுக்கத்தில் நல்ல மாணவனாக மசுத் திகழ்ந்தான்' என்று குறிப்பிட்டுள்ளார்.