ஏடிஎம்மிற்குள் புகுந்து கத்தியைக் காட்டி கொள்ளையடித்த மாணவர்கள்... பெங்களூருவில் பயங்கரம்!
பெங்களூரு: பெங்களூருவில் ஏ.டி.எம்., மையதிற்குள் புகுந்து பெண்களைக் கத்தியைக் காட்டி மிரட்டி மொபைல் மற்றும் பர்சை கொள்ளையடித்த இரண்டு மாணவர்களைப் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் பெங்களூரு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற பெண் வங்கி அதிகாரி ஒருவர் தலையில் வெட்டப்பட்டார். மேலும், அவரது பணமும் திருடப் பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான அக்காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நடந்து ஓராண்டுகள் ஆகியும் குற்றவாளியைப் பிடிக்க போலீசார் திணறி வருகின்றனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இச்சம்பவத்தை அடுத்து ஏ.டி.எம்.களின் பாதுகாப்பை அதிகரிப்பது குறிப்பது நடவடிக்கைகள் ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் பெங்களூரு ஏ.டி.எம்.மில் இரு பெண்களை மிரட்டி திருட்டு நடைபெற்றுள்ளது.
பெங்களூரு வசந்த் நகர் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்மிற்கு மாலை நேரத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளனர் பெண்கள் இருவர். காவலாளி இல்லாத அந்த ஏ.டி.எம்.மில் அப்பெண்கள் பணம் எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு கத்தியுடன் நுழைந்துள்ளனர் இரண்டு மாணவர்கள்.
தங்களிடமிருந்த கத்தியைக் காட்டி மிரட்டி அப்பெண்களிடமிருந்து மொபைல் மற்றும் பர்சைப் பறித்துச் சென்றுள்ளனர். அவர்கள் சென்றதும் அப்பெண் கூச்சலிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அப்பக்கம் சென்ற பொதுமக்கள், மாணவர்கள் இருவரையும் துரத்திப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த திருட்டு சம்பவத்தால் மீண்டும் ஏடிஎம்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.