தமிழகத்தில் மட்டுமல்ல, பெங்களூரிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஆரம்பம்! அணைகள் காலி
பெங்களூர் நகருக்கு இந்த கோடை காலத்தில் 6.32 டிஎம்சி தண்ணீர் தேவை என்பது கணக்கீடு. ஆனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டில் இப்போது இருப்பதோ வெறும் 7.15 டிஎம்சி தண்ணீர்தான்.
பெங்களூர்: கோடை காலம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கும் முன்பாகவே, பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது இதற்கு முக்கிய காரணம்.
நாள் ஒன்றுக்கு பெங்களூருக்கு 1440 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், தற்போது 1350 மில்லியன் லிட்டர் மட்டுமே கிடைக்கப்பெற்று வருகிறது.
வேறு வழியில்லாமல், பெங்களூர் குடிநீர் வாரியம், இந்த நிலையை சமாளிக்க போர்வெல் கிணறுகளை தோண்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. பழுதாகியுள்ள போர்வெல்களையும் புதுப்பிக்கத் தொடங்கியுள்ளது.
பெங்களூர் நகருக்கு இந்த கோடை காலத்தில் 6.32 டிஎம்சி தண்ணீர் தேவை என்பது கணக்கீடு. ஆனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டில் இப்போது இருப்பதோ வெறும் 7.15 டிஎம்சி தண்ணீர்தான். இதை வைத்து பெங்களூர் மட்டுமின்றி, மண்டியா, மைசூர், மத்தூர் போன்ற நகரங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் பெரிய சிக்கல்.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையில் 13.52 டிஎம்சி தண்ணீர் இருந்தது கவனிக்கத்தக்கது. கபினி அணையில் தற்போது 0.95 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. கடந்த வருடம் இது 4.33 டிஎம்சியாக இருந்தது. ஹேமாவதி அணையில் தற்போது 2.28 டிஎம்சி தண்ணீர் உள்ளது. கடந்த வருடம் இது 4.40 டிஎம்சி என்ற அளவில் இருந்தது.