தெருவில் பிச்சை எடுப்பதை விட பெண்கள் நடன பார்களில் ஆடுவது மேல்: சுப்ரீம் கோர்ட் அதிரடி
டெல்லி: பெண்கள் தெருவில் பிச்சை எடுப்பதை விட நடன விடுதிகளில் ஆடுவது மேல் என உச்ச நீதிமன்றம் மகாராஷ்டிரா அரசிடம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நடன விடுதிகள், ஹோட்டல்களில் பெண்கள் நடனமாட மாநில அரசு தடை விதித்து மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியது. இந்த தடையை எதிர்த்து ஹோட்டல்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பெண்கள் நடன விடுதிகள், ஹோட்டல்களில் நடனமாட அனுமதி அளித்து தீர்ப்பு அளித்தது. இதையடுத்து மாநில அரசு பெண்கள் நடன விடுதிகளில் நடனமாட பல கெடுபிடிகளை விதித்து புதிய மசோதா ஒன்றை கொண்டு வந்தது.
இந்நிலையில் மும்பை நடன விடுதிகளில் நடப்பது ஆபாச நடனமாக உள்ளது என்று கூறி அதற்கு தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
நடனம் ஆடுவது ஒரு தொழில் ஆகும். அது ஆபாசமாக இருந்தால் அதை அரசு ஒழுங்குபடுத்தலாம். அரசின் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு தடைபோட முடியாது.
பெண்கள் தெருக்களில் பிச்சை எடுப்பது, தகாத செயல்களில் ஈடுபடுவதை விட நடன விடுதிகளில் ஆடி சம்பாதிப்பது மேல் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.