நீங்கள் காங்கிரஸ் விரோதியா.. இந்தா பிடிங்க 'பாரத ரத்னா'!!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதிரடியாக காங்கிரஸை எதிர்த்து கலகக் குரல் எழுப்பியவர்களை மட்டுமே தேர்வு செய்து பாரத ரத்னா விருதை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா, சுதந்திரத்துக்காக போராடிய முதுபெரும் தலைவர்கள், துறைசார் வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. 1954ஆம் ஆண்டு முதல் இதுவரை 43 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் மெல்ல மெல்ல அதிலும் அரசியல் நுழைந்து சர்ச்சையை உருவாக்கியது. அண்மையில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவரை விட நாடு விடுதலை அடைவதற்கு முன்பே ஒலிம்பிக்கில் வென்று இந்தியாவுக்கு ஹாக்கி விளையாட்டில் பெருமை சேர்த்த மேஜர் தயான்சந்துக்கு தராமல் டெண்டுல்கருக்கு தருவதா? என்ற கேள்வியும் எழுந்தது.
ஐவருக்கு பாரத ரத்னா
தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசு, பாரத ரத்னா விருதுக்கு 5 பதங்கங்களை தயாரிக்குமாறு ரிசர்வ் வங்கியின் நாணய தயாரிப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து யார் அந்த 5 பேர் என்ற யூகப் பட்டியல் வெளியாகி சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
யார் யாருக்கு?
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வாரணாசி இந்து பல்கலைக் கழகத்தை நிறுவிய மதன் மோகன் மாளவியா, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மேஜர் தயான்சந்த், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இவர்களுக்குமா?
அதே நேரத்தில் பிரபல ஓவியர் ரவிவர்மா, இந்து புராணங்களை வெளியிட்ட கீதா பதிப்பகத்தை உருவாக்கிய அனுமன் பிரசாத் போடர் ஆகியோரின் பெயர்களும் பாரத ரத்னா விருதுக்கு அடிபடுகின்றன.
காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள்
தற்போது மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறவர்களில் 4 பேர் காங்கிரஸை எதிர்த்து கலகக் குரல் எழுப்பியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
நாட்டு விடுதலைக்காக காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து போராடினாலும் பின்னர் காங்கிரஸை விட்டு வெளியேறி வெளிநாடுகளின் உதவியுடன் இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து ஆங்கிலேயருடன் யுத்தம் செய்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரது மரணத்தின் மர்மம் இன்னமும் விலகவில்லை. இதனாலேயே இவரது குடும்பத்தினர் 'நேதாஜி'க்கு பாரத ரத்னா விருது வேண்டாம் என்று நிராகரித்து வருகின்றனர்.
மதன் மோகன் மாளவியா
நாட்டின் விடுதலைக்காக போராடிய முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரர். வாரணாசியில் இந்து பல்கலைக் கழகத்தை நிறுவியவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக பல முறை இருந்தவர். 1932ஆம் ஆண்டு தனித்தொகுதி முறை உருவாக்கப்பட்ட போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார். இதனால் காங்கிரஸை விட்டு நீக்கப்பட்ட அவர், காங்கிரஸ் தேசியவாத கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.. இந்துத்துவா சிந்தனையுடன் இருந்தவர் என்றாலும் தலித்துகளுக்கும் ஆலய நுழைவு உரிமை வேண்டும் என்று போராடியவர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்
சுதந்திர போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டாலும் இந்துத்துவா சிந்தனையை வளர்த்தெடுத்த சியாமா பிரசாத் முகர்ஜியின் சீடராகவே வளர்ந்தவர். காங்கிரஸுக்கு எதிராக உருவான ஜனசங்கம், பின்னர் பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றின் தூண்களில் ஒருவர் வாஜ்பாய்.
கன்சிராம்
மத்திய அரசுப் பணியில் இருந்த கன்சிராம், பின்னாளில் தாழ்த்தப்பட்ட- பழங்குடி இனமக்களுக்கான இயக்கம் கண்டவர். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு மாறாக பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கியவர். தன் வாழ்க்கையின் இறுதிநாளில் புத்தமத்தை தழுவியவர்.