குஜராத்தில் அடுத்த முதல்வர் யார்.. ட்விஸ்ட் வைக்குமா பாஜக.. பரபரப்பில் நிர்வாகிகள்
காந்திநகர்: குஜராத்தில் 7-வது முறையாக பாஜக ஆட்சி அமைய உள்ளது ஏறத்தாழ உறுதியாகிவிட்ட நிலையில் முதல்வராக பூபேந்திர படேலே நீடிப்பாரா.. அல்லது பாஜக மேலிடம் ஏதேனும் ட்விஸ்ட் வைக்குமா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
குஜராத்தில் எதிர்பார்த்தது போலவே பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தலில் 99 தொகுதிகளை வென்று ஆட்சியை தக்க வைத்து இருந்த பாஜக இந்த முறை அதை விட கூடுதல் இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

வெறும் 20 தொகுதிகளில்
மொத்தமாக குஜராத்தில் ஸ்வீப் செய்யும் என்றே தற்போதைய முன்னிலை விவரங்கள் காட்டுகின்றன. கருத்துக்கணிப்புகளில் கூறியதைவிட அதிக இடங்களில் பாஜக முன்னிலை பெற்று மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துவிட்டது. கடந்த தேர்தலில் கடும் சவால் அளித்த காங்கிரஸ் இந்த முறை படு தோல்வியை சந்தித்துள்ளது. தற்போதைய முன்னிலை நிலவரங்களின் படி வெறும் 20 தொகுதிகளில் கூட காங்கிரஸ் முன்னிலையில் இல்லை. ஏற்த்தாழ வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் குஜராத்தில் பாஜகவினர் கொண்டாடத் தொடங்கி விட்டனர்.

விஜய் ரூபானி
இந்த நிலையில் தற்போது குஜராத் முதல்வராக இருக்கும் பூபேந்திர படேலுக்கு மீண்டும் முதல்வராக வாய்ப்பு கிடைக்குமா? அல்லது புதியவரை முதல்வராக கட்சி மேலிடம் முன்னிறுத்துமா? என்பது தற்போது பில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது. 2017 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும் முதல்வராக விஜய் ரூபானி பொறுப்பேற்றுக்கொண்டார். எனினும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விஜய் ரூபானி முதல்வர் பொறுப்பில் இருந்து விலகினார்.

மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா?
கட்சி மேலிடம் அறிவுறுத்தலின் படி விஜய் ரூபானி தனது முதல்வர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து தான் பூபேந்திர படேல் முதல்வராக பதவியேற்றார். பூபேந்திர படேல் முதல்வர் பொறுப்பை ஏறத்தாழ ஒரு ஆண்டுகள் மட்டுமே வகித்து இருக்கிறார். இதனால், பூபேந்திர படேலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்விகள் குஜராத் பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளன. எனினும், கடந்த மாதம் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பூபேந்திர படேல் தான் முதல்வராக நீடிப்பார் என்று பேசியிருந்தார்.

அடுத்த முதல்வராக பூபேந்திர படேல் தான்
அப்போதே பூபேந்திர படேல் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை தெளிவு படுத்தும் வகையில் அமைந்தது. தேர்தலுக்கு முன்பாகவே முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் மூத்த தலைவர் பூபேந்திரசிங் சவுதஸ்மா ஆகியோர் தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்று அறிவித்து விட்டனர். அதன்படி தேர்தலிலும் போட்டியிடவில்லை. எனவே, குஜராத்தின் அடுத்த முதல்வராக பூபேந்திர படேல் தான் நீடிப்பார் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications