உயர்ஜாதியினர் வெளிநாட்டினர்... ஆரிய வழித்தோன்றல்கள்: பீகார் முதல்வரின் அதிரடி பேச்சு
பட்னா: இந்தியாவில் தலித்துகளும் பழங்குடியினரும்தான் மண்ணின் மைந்தர்கள்.. உயர்ஜாதியினர் அனைவரும் வெளிநாட்டினர்.. ஆரிய வழித்தோன்றல்கள் என்று பீகார் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் விலகினார்.
அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் ஜிதன் ராம் மஞ்சி புதிய முதல்வராக பதவி ஏற்றார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். ஜிதன்ராம் மஞ்சி அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
"நாள் முழுவதும் கடினமாக உழைத்துவிட்டு வருவோர் இரவில் சிறிதளவு மது குடிப்பதில் ஒன்றும் தவறு இல்லை" என்று பேசியிருந்தார். அதன் பின்னர் சரியாக பணிபுரியாத மருத்துவர்களின் கைகளை வெட்ட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த சர்ச்சைகளில் இப்போது, தலித்துகளும் பழங்குடியினரும்தான் இந்த மண்ணின் மைந்தர்கள். இதர உயர்ஜாதியினர் அனைவருமே வெளிநாட்டினர்.. ஆரியர் இனத்தின் வழித்தோன்றல்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
ஜிதன்ராம் மஞ்சியின் இந்த விமர்சனத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த பேச்சின் மூலம் பீகாரில் ஜாதி மோதல்களைத் தூண்டி விடுகிறார் மஞ்சி என்று பீகார் முன்னாள் துணை முதல்வரும் பாஜக தலைவருமான சுஷில் மோடி சாடியுள்ளார்.