நவீன் பட்நாயக் மக்களுக்காக உழைக்கிறார், தேர்தலுக்காக அல்ல.. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புகழாரம்
புவனேஸ்வர்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்தியா டுடே ஊடகத்தில் பிரத்யேகமாக அளித்துள்ள பேட்டியொன்றில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பற்றி புகழ்ந்துரைத்துள்லார். புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பதாகட்டும், சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறையை வளர்ப்பதிலாகட்டும், நவீன் பட்நாயக் சிறப்பாக செயல்படுவதாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நான் நவீன் பட்நாயக் உடன் நீண்ட தனிப்பட்ட உறவை பகிர்ந்து கொள்கிறேன். அவர் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்கான அவரது பார்வை, நீதி மற்றும் வளர்ச்சிக்கான அவரது விஷன் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் மீதான அவரது மரியாதை எப்போதும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

அவர் அரசியலில் நுழைந்தபோது, "பிஜு பாபுவின் மகன்" என்ற மரியாதைக்குரிய அடையாளத்துடன் வந்தார். கடந்த 24 ஆண்டுகளில், அவர் தனக்காக ஒரு அடையாள பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளார். மக்கள் பொதுவாக அதிகாரம் மற்றும் கால ஓட்டத்தோடு மாறுகிறார்கள். ஆனால் நவீன் அப்படி இல்லை. நவீன் பட்நாயக்கை ஒரு 50 வயதானவராக நான் பார்த்தேன். இப்போது வரை அவர் அப்படியேத்தான் இருக்கிறார். அவர் தனது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறார்.
நவீன் பட்நாயக் எப்படி அரசியலில் இவ்வளவு பெரிய வெற்றியை தொடர்ந்து பெற்றார் என்று மக்கள் கேட்கிறார்கள். அவரே அதற்கான பதிலை ஒரு நேர்காணலில் தெரிவித்து இருந்தார். அதாவது "நான் மக்களுக்காக உழைக்கிறேன், தேர்தலுக்காக அல்ல." என்று அவர் கூறியிருந்தார். அதுதான் வெற்றியின் ரகசியம். ஒவ்வொரு தேர்தலிலும் அவர் தொடர்ந்து வெற்றி பெறுகிறார். ஏனெனில் அவரது பணிகள் அவரது வார்த்தைகளை விட அதிகமாக எதிரொலிக்கிறது. ஐந்தாவது தேர்தலில், அவர் ஒரு வரி மட்டுமே பிரச்சாரத்தில் பேசினார், ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றார் என்று அறிந்தேன். நவீன் பட்நாயக் பிரச்சாரத்தின்போது மக்களிடம் கேட்டது ஒன்றே ஒன்றுதான் "நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?" என்ற வார்த்தை மட்டுமே. இதற்கு பதிலாகத்தான் மக்கள் வெற்றியை பரிசளிக்கிறார்கள்.
2000ம் ஆண்டின் தொடக்கத்தில் நவீன் பட்நாயக் பொறுப்பேற்றபோது, ஒடிசா கடினமான காலங்களைக் கடந்து சென்றது. கடந்த 20 வருடங்களாக பல பேரிடர்களை எதிர்கொண்டு ஒடிசா முன்னேறியுள்ளது. அவர் புயல்களை கையாண்டது தேசிய மற்றும் சர்வதேச பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. மாநிலம், விளையாட்டு மற்றும் சுற்றுலாத் துறையில் தனது முத்திரையை பதித்துள்ளது மற்றும் பாராட்டத்தக்க வளர்ச்சி விகிதத்தை பராமரித்து வருகிறது. வரலாறு அவரை ஒரு கண்ணியமான நபராகவும், தன்னம்பிக்கை நிறைந்தவராகவும், லட்சியங்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய சமூகவாதியாகவும் நினைவுகூரும். இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications