இனி திருநங்கைகள் மூன்றாவது பாலினம்.. சபாஷ் பீகார்!
பாட்னா: பீகார் மாநில அரசு, திருநங்கைகளை மூன்றாவது பாலினம் என்ற அட்டவணையின் கீழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக மாறியுள்ளது.
திருநங்கைகள் எனப்படுபவர்கள், பிறப்பில் வேறு பாலினமாகவும் அல்லது ஒரு பாலினமாக இருந்து பின்னர் வேறு பாலினமாகவும், உடலின் சில ஹார்மோன் மாற்றங்களினால் வேறுபாடு அடைந்து காணப்படுபவர்கள் ஆவர்.
அவர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்களில் சிலர் தவறான பாதையில் சென்றாலும், பலர் போராடி பல்வேறு துறைகளில் வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனர்.
அந்த வகையில் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக, அவர்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு, "மூன்றாவது பாலினம்" என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது பீகார் அரசு. இதனால் அவர்களுக்கும், மற்ற இரு பாலினருக்கும் உரிய சலுகைகள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சரவையின் முதன்மைச் செயலாளர் பிரிஜேஸ் மெஹ்ரோத்ரா , " மாநிலத்தில் உள்ள திருநங்கைகள் மூன்றாவது பாலினமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி அரசு சட்ட விதிகளின் படி அவர்கள் அரசு பணிகளில் அமர்த்தப்படுவர்" என தெரிவித்துள்ளார். இது வேதனையில் தவிக்கும் திருநங்கைகளுக்கு காதில் இனிப்பான செய்தியாய் விழுந்துள்ளது.