கேரளாவில் பறவைக் காய்ச்சல்- 4 லட்சம் வாத்து, கோழிகள் தீ வைத்து அழிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கிய 4 லட்சம் வாத்து மற்றும் கோழிகளை தீ வைத்து அழிக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் பறவை காய்ச்சல் பரவியதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. மத்திய குழுவினரும் ஆலப்புழாவில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பத்தனம்திட்டா மாவட்டத்திலும் பறவை காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆலப்புழா, பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பீதியால் லட்சக்கணக்கில் வாத்துகளை கொன்று புதைத்து வருகின்றனர். பறவை காய்ச்சல் பீதி நிலவும் ஆலப்புழாவில் பல ஆயிரம் வாத்துகள் கொல்லப்பட்டு வரும் நிலையில், அந்த மாவட்டத்தில் இருந்து கேரளாவின் மற்ற பகுதிகளுக்கு வாத்து மற்றும் இறைச்சி கோழிகள் விற்பனைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது.
இதனால் திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு வாத்து மற்றும் இறைச்சி கோழிகளை கொண்டு செல்ல 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் நாமக்கல், பல்லடத்தில் இருந்துதான் கேரளாவுக்கு விற்பனை செய்ய அதிக அளவு இறைச்சி கோழிகள் செல்கின்றன. பாலக்காடு, கோவை எல்லையில் வாளையார் சோதனை சாவடி வழியாக தினமும் 200 முதல் 300 வாகனங்களில் இறைச்சி கோழிகள் கொண்டு செல்லப்படும்.
வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் 500 முதல் 600 வாகனங்களில் இறைச்சி கோழிகள் கேரளாவுக்கு செல்லும். கடந்த 2 நாட்களாக ஒரு சில லாரிகள் மட்டும் வாளையார் செக் போஸ்ட் வழியாக கேரளாவுக்கு சென்றன.