முதல் கட்ட தேர்தலுக்கு 4 நாள்தான் இருக்கு.. இன்னும் வெளியாகாத பாஜக தேர்தல் அறிக்கை!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியோ இன்னமும் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் இருப்பது கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதா கட்சியே அடுத்த ஆட்சி அமைக்கும் என்பதுதான் ஊடகங்களின் ஒட்டுமொத்த கணிப்பாக இருக்கிறது. நரேந்திர மோடிதான் பிரதமர் என்றும் கூறப்பட்டு வருகிறது.
பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கருத்து கணிப்பும் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இத்தனை சாதக அம்சங்களையும் தாண்டி பாரதிய ஜனதா கட்சியால் தேர்தல் அறிக்கை கூட வெளியிட முடியவில்லை என்று விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைப்பதால் அக்கட்சியினர் அதிருப்தியில் இருக்கின்றனர்.
தோல்வியைத் தழுவப் போகிற காங்கிரஸ் கூட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டது. அது தொடர்பான ஊடக விவாதங்களும் நடந்து முடிந்தே விட்டன.
ஆனால் பாரதிய ஜனதா மட்டும் இன்னமும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. இதற்குக் காரணம் பாஜக தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் இந்த பரிதாப நிலையைக் கண்டு பிற கட்சிகள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றன.