மோடி பிரதமரானதும் டெல்லி அருகே முதல் பெரிய கொலை.. பாஜக தலைவர் சுட்டுக் கொலை
கிரேட்டர் நொய்டா: பாஜக தலைவரும் தத்ரி நகர் பஞ்சாயத்துத் தலைவருமன கீதா பண்டிட்டின் கணவர் விஜய் பண்டிட் நேற்று இரவு தத்ரி பகுதியில் நான்கு பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மோடி பிரதமரான பின்னர் டெல்லிக்கு வெகு அருகே நடந்த முக்கிய, பெரிய கொலையாகும் இது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாஜகவினர் வன்முறையில் இறங்கினர். காவல் நிலையம் அருகே 16 வாகனங்களை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தி விட்டனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த கொலையாளிகள், பண்டிட்டுக்குச் சொந்தமான கோவிலுக்குப் போனார்கள். அங்கிருந்த பண்டிட்டை சூழ்ந்த அவர்கள் அவரது வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டு விட்டனர். இதில் பண்டிட் அங்கேயே உயிரிழந்தார். பின்னர் பண்டிட்டின் மார்பிலும் அவர்கள் சரமாரியாக சுட்டனர். அவர் இறந்ததை உறுதி செய்து கொண்டு பின்னர் தப்பிச் சென்றனர்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களை அச்சுறுத்த வானத்தை நோக்கியும் சில ரவுண்டு கொலையாளிகள் சுட்டுள்ளனர்.
இத்தகவல் காட்டுத் தீ போல பரவியதும் பாஜகவினர் திரண்டு விட்டனர். வன்முறையில் குதித்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர்.
தற்போது அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத் தடுப்புப் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
4 பேர் கைது
இதற்கிடையே பண்டிட் கொலை தொடர்பாக நான்கு பேரை போஸீார் கைது செய்துள்ளனர். தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.