டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க முயற்சி- ‘பின் வாசலில் நுழைவதாக’ ஆம் ஆத்மி, காங். கண்டனம்
டெல்லி: மத்தியில் ஆளும் கட்சியான பாஜக டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என வெளியாகியுள்ள செய்திற்கு ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு இறுதியில் டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், அதிக இடங்களைப் பிடித்த பாஜக ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆதரவும் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது.
மக்களின் கூடுதல் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்றார். ஆனால், ஆட்சி அமைத்த 49 நாட்களில் தனது முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து டெல்லியில் குடியாசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக ஆதரவு பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக, டெல்லியில் ஆட்சி அமைக்க முயல்வதாக செய்திகள் வெளியாகின.
இதற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் குமார் விஸ்வாசை அவர்கள் விலைக்கு வாங்க முயற்சிப்பதாகவும் பரபரப்புத் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், டெல்லியில் ஆட்சி அமைக்க விருப்பமில்லை என கடந்தாண்டு தெரிவித்த பாஜக தற்போது பின்பக்க வாசல் வழியாக உள்ளே நுழைய முயற்சிப்பது ஏன் என ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது ஆம் ஆத்மி.
இதற்கிடையே டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க முயல்வதாக வெளியான தகவலிற்கு காங்கிரசும் தனது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளது.