காணாமல் போன சோமசேகர ரெட்டி.. போலீஸ் பாதுகாப்பில் சட்டசபைக்கு திரும்பினார்
கர்நாடக சட்டசபை தொடங்கி இருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பில் பாஜக எம்எல்ஏ சோமசேகர ரெட்டி கலந்து கொள்ளவில்லை.
Recommended Video
பெங்களூர்: காலையில் காணாமல் போய் இருந்த பாஜக எம்எல்ஏ சோமசேகர ரெட்டி தற்போது போலீஸ் பாதுகாப்புடன் சட்டசபைக்கு திரும்பி உள்ளார்.
இன்று மாலை 4 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.
இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.
இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையில் தற்போது சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு நடந்து முடிந்தது. தற்காலிக சபாநாயகர் போப்பையா எம்எல்எங்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மாலை வாக்கெடுப்பு நடக்கும் என்பதால் இப்போதே எல்லோரும் பதவி ஏற்றாக வேண்டும்.
ஆனால் இந்த பதவியேற்பு நிகழ்விற்கு பாஜக எம்எல்ஏ சோமசேகர ரெட்டி வரவில்லை. அவர் இன்னும் பதவி ஏற்பு நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. விரைவில் அவர் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. அதேபோல் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
இது காங்கிரஸ் கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே இவர்கள் இருவரையும் ரெட்டி குடும்பம்தான் கடத்தி வைத்துள்ளது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தற்போது இவர்களுடன் சோமசேகர ரெட்டியும் வராதது சந்தேகத்தை அதிகப்படுத்தியது. சோமசேகர ரெட்டிதான் இவர்களை கடத்தி வைத்துக் கொண்டு, அவர்களுடன் தலைமறைவாகி இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதனால் இந்த மூன்று பேரையும் தேடும்படி கர்நாடக டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் எல்லாம் போலீஸ் தீவிரமாக தேடி வந்தது. முக்கியமாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருக்கும் ஹோட்டலில் அவர்கள் இருக்கிறார்களா என்று அவர்கள், தீவிரமாக தேடி வருகிறார்கள்.
போலீசுடன் மஜத கட்சியை சேர்ந்த ரேவண்ணா மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்பி சுரேஷ் ஆகியோர் தேடுதல் வேட்டையில் களமிறங்கினர். இவர்களுடன் இன்னும் சில காங்கிரஸ் - மஜத தொண்டர்கள் களத்தில் இறங்கினர்.இந்த நிலையில் அவர்கள் இருவரில், பிரதாப் கவுடா மட்டும் பெங்களூரில் உள்ள கோல்ட் பின்ச் ஹோட்டலில் இருந்துள்ளனர். போலீஸ் அவரை மீட்டது. தற்போது இவரை சட்டசபைக்கு பதவியேற்பிற்காக அழைத்து வரப்படுகிறார்.
காலையில் காணாமல் போய் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவரையும் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ சோமசேகர ரெட்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.சோமசேகர ரெட்டி தற்போது போலீஸ் பாதுகாப்புடன் சட்டசபைக்கு திரும்பி உள்ளார்.