கடைசி நிமிடத்தில் பாஜகவுக்கு ‘கல்தா’ கொடுத்த பெண் எம்.எல்.ஏ.. ஒரே அசிங்கமா போச்சு- அதிரடி சஸ்பெண்ட்!
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநில ராஜ்ய சபா தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ ஷோபாராணி குஷ்வாஹா கட்சியிலிருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்துள்ள மாநிலங்களவை தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 3 இடங்களைக் கைப்பற்றியது. 1 இடத்தை பாஜக வென்றுள்ளது.
பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் தோல்வியடைந்துள்ளார். அவருக்கு எதிராக வாக்களித்த பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜ்ய சபா தேர்தல்
மாநிலங்களவையில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்தில் 4 ராஜ்ய சபா எம்.பி பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகிய மூவர் களத்தில் இருந்தனர். பாஜக சார்பில் கன்ஷியாம் திவாரி போட்டியிட்டார். ஐந்தாவது வேட்பாளராக பாஜக ஆதரவுடன் ஜீ குழும தலைவர் சுபாஷ் சந்திரா களத்தில் இருந்தார். 4 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் 5 பேர் களத்தில் இருந்தனர். இதனால் அங்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
காங்கிரஸ் வெற்றி
ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் மொத்தம் 200 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்த நிலையில் காங்கிரஸ் 3 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க 1 இடத்தைக் கைப்பற்றியது. பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக தேர்தலில் நின்ற ஜீ குழும தலைவர் சுபாஷ் சந்திரா தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் திவாரி நான்காவது எம்.பி சீட்டுக்கு வெற்றி பெற்றார்.
11 வாக்குகள் குறைவு
ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை ஒரு ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு வெற்றி பெற ஒரு வேட்பாளருக்கு 41 வாக்குகள் தேவை என்ற நிலையில் சுபாஷ் சந்திரா 30 வாக்குகள் பெற்றார். அவருக்கு 27 பாஜக வாக்குகளும், 3 ஆர்.எல்.பி வாக்குகளும் கிடைத்தன. சுபாஷ் சந்திரா வெற்றி பெற பாஜக தாண்டி 11 வாக்குகள் தேவை, பிரமோத் திவாரி வெற்றி பெற காங்கிரஸ் தாண்டி 15 வாக்குகள் தேவை என்றிருந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏவின் ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் திவாரி வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ
இந்த தேர்தலின் போது பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ ஷோபா ராணி குஷ்வாகா , கட்சி மாறி காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கட்சியிலிருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில பா.ஜ.க தலைவர் சதீஷ் பூனியா தெரிவித்துள்ளார்.