2019 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு அதிகபட்சம் 110 சீட்தான் கிடைக்கும்... சிவசேனா 'பொளேர்'
வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு 110 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது சிவசேனா.
மும்பை: 2019-ம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு அதிகபட்சமாக 110 இடங்கள்தான் கிடைக்கும் என கூறுகிறது சிவசேனா.
இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ளதாவது:
கோரக்பூர், புல்பூர் இடைத்தேர்தல்களில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றிருப்பது பாஜக முகாமை பீதிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த வாரம்தான் திரிபுரா போன்ற சிறிய மாநிலங்களில் வென்றதை கொண்டாடியது பாஜக.
யோகியின் கோட்டையில் ஓட்டை
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் ஓராண்டுக்கு முன்னர்தான் அமோக வெற்றியைப் பெற்றது பாஜக. 1991-ம் ஆண்டு முதல் கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து வென்று வந்தார்.
திரிணாமுல், காங்கிரசால் வெற்றி
2014-ம் ஆண்டு முதல் பாஜக அதிகாரத்தைக் கைப்பற்ற எத்தனை பேரங்களை செய்திருக்கிறது? திரிபுராவில் ஒட்டுமொத்த காங்கிரஸ், திரிணாமுலை இணைத்துக் கொண்டதால் வென்றது. இப்போது சமாஜ்வாடியில் இருந்து நரேஷ் அகர்வாலை சேர்த்துக் கொண்டிருக்கிறது.
லாலு கட்சி வெற்றி
பீகாரில் ஊழல் குற்றச்சாட்டுக்காக லாலு சிறையில் இருக்கிறார். ஆனாலும் இடைத்தேர்தலில் லாலு கட்சி வென்றிருப்பது நிதிஷ்குமார், மோடிக்கு பெரும் பின்னடைவு.
280 கிடைக்காது..110 தான்
இப்படி தொடரும் தோல்விகளால் 2019-ம் ஆண்டு பாஜக நிச்சயம் 280 இடங்களில் வெல்ல முடியாது. அதிகபட்சமாக 100 முதல் 110 இடங்களில்தான் பாஜகவால் வெல்ல முடியும்.
தரையில் நடக்கட்டும் பாஜக
லோக்சபா தேர்தலில் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இஸ்ரேலுடன் மோதப் போவதில்லை. இந்தியாவில்தான் நடைபெறப் போகிறது. ஆகையால் பாஜக ஆகாயத்தில் பறந்து கொண்டிருப்பதைவிட்டு பூமியில் நடக்க வேண்டும்.
இவ்வாறு சாம்னா விமர்சித்துள்ளது.