இதையேதான் அந்த டெய்லர் மறுபடியும் மறுபடியும் சொன்னான்... யாராச்சும் கேக்கறீங்களாப்பா!!
டெல்லி: கருப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளிலிருந்து மீட்பது கடினம் என்று அன்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வந்தபோதும் அதை பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காதில் போட்டுக் கொண்டதே இல்லை. அன்று காங்கிரஸ் அரசு சொன்னதையே பாஜகவினரும் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
இதைத்தானே அன்று நாங்களும் சொன்னோம். அப்போது எங்களை விமர்சித்த பாஜக இப்போது மட்டும் கருப்புப் பணத்தை மீட்க முடியாது என்று சொல்வது என்ன நியாயம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்க ஆரம்பித்துள்ளன.
கருப்புப் பணம் போட்டு வைத்துள்ளோரின் பட்டியலில் இந்தியர்களின் பெயர் இல்லையே என்று சமீபத்தில் சுவிட்சர்லாந்து அரசு கூறியது.
ஆமா.. ஆமா அருண் ஜேட்லி
இதை நாடாளுமன்றத்திலும் தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கருப்புப் பணப் பட்டியலில் இந்தியர்களின் பெயர்கள் இல்லை என்று சுவிஸ் அரசு கூறுவதாக தெரிவித்தார்.
அதைத்தானே அன்று காங்கிரஸும் சொன்னது
இதையேதான் அன்று காங்கிரஸ் அரசும் கூறியது. ஆனால் அப்போது அதை கடுமையாக எதிர்த்துப் பேசியிருந்தார் அத்வானி.
மீண்டும் சொல்லும் பாஜக
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் நிஷிகாந்த் துபேயும், சுவிஸ் வங்கிகளிலிருந்து கருப்புப் பணத்தை மீட்பது கடினமான காரியம் என்று கூறியுள்ளார். அதுவும் அருண் ஜேட்லியை அருகில் வைத்துக் கொண்டே கூறியுள்ளார்.
காங்கிரஸ் கண்டனம்
இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ரஷீத் அல்வி கூறுகையில் கருப்புப் பண விவகாரம் தொடர்பாக பாஜக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பொய்யாப் பேசுறீங்களே பாஸ்...
தேசியவாத காங்கிரஸ் தலைவர் மஜீத் மேமன் கூறுகையில், பாஜக அரசு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையே அளிக்கிறது என்பதற்கு இது உதாரணம் என்றார்.
இப்ப என்ன சொல்லப் போறீங்க
சிபிஐ கட்சியின் அதுல் அஞ்சான் கூறுகையில், கருப்புப் பணத்தைக் கொண்டு வருவோம் என்று கூறிய பாஜகவும், ராம்தேவும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள் என்று கேட்டுள்ளார்.
இல்லை.. இல்லை கொண்டு வருவோம்
அதேசமயம் பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், நிச்சயம் கருப்புப் பணத்தை பாஜக அரசு மீட்டுக் கொண்டு வரும் என்று கூறியுள்ளார்.