அஸ்ஸாமில் மோசமடையும் வெள்ள நிலைமை: நீரில் மூழ்கிய எல்லையோர ராணுவ முகாம்கள்
துப்ரி: அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் வங்கதேச எல்லையையொட்டி உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாம்கள் நீரில் மூழ்கியுள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் மாநிலத்தில் உள்ள 20 மாவட்டங்களைச் சேர்ந்த 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2 வாரங்களில் வெள்ளத்தால் 30 பேர் பலியாகியுள்ளனர்.
துப்ரி மாவட்டத்தில் வங்கதேச எல்லையையொட்டி உள்ள பகுதிகளில் பணியாற்றி வரும் எல்லை பாதுகாப்பு படையினருக்கும் வெள்ளம் பெரும் தலைவலியாக உள்ளது. அவர்களின் முகாம்கள் வெள்ளநீரில் மூழ்கிவிட்டன. வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அஸ்ஸாமுக்குள் நுழைபவர்களை தடுத்து நிறுத்துவது கடினமாக உள்ளது.
வங்கதேச எல்லையையொட்டியுள்ள ஹதிசார் எல்லைப் பாதுகாப்பு படை முகாமிற்குள்ளேயே படகில் செல்ல வேண்டி உள்ளது. கடந்த ஒரு வார காலமாக அந்த முகாமில் இடுப்பளவு நீர் உள்ளது.
இது குறித்து அந்த முகாமைச் சேர்ந்த வீரர் ஒருவர் கூறுகையில்,
எங்களின் படுக்கைகள் நீருக்கு அடியில் உள்ளன. நாங்கள் விரகு அடுப்பில் சமைத்து வந்தோம். தற்போது சமையல் செய்வது பெரிய பிரச்சனையாக உள்ளது. எல்லைப் பகுதியை படுகுகள் மூலம் கண்காணித்து வருகிறோம் என்றார்.
அடுத்த சில நாட்களில் மழை நின்றுவிடும் என்று நம்பப்படுகிறது. மாநிலத்தில் 300 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.